Advertisment

TNPSC Group 4: விஏஓ தேர்வு சிலபஸ்; கட் ஆஃப் மார்க் தகவல்கள் இதோ!

TNPSC group 4 VAO exam syllabus cutoff details for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; பாடத்திட்டம், கட் ஆஃப் உள்ளிட்ட தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்

author-image
Ambikapathi Karuppaiah
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Exam: உங்க வீட்டில் இருந்தபடி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு பயிற்சி; தொடங்கி வைத்த ஸ்டாலின்!

குரூப் 4 தேர்வு விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பாடத்திட்டம், கட் ஆஃப், தகுதிகள் உள்ளிட்ட தேர்வர்களுக்கான முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு தனி மவுசு தான். ஏனெனில் அரசு வேலைக்காக ஏங்கும் பலரின் கனவை நனவாக்கும் தேர்வு இந்த குரூப் 4 தேர்வு தான். இப்போது குரூப் 4 தேர்வில் விஏஓ பதவிகளும் நிரப்பப்பட்டு வருவதால், இந்த தேர்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2 மற்றும் இதர தேர்வுகளை நடத்தி வருகிறது. இருப்பினும் குரூப் 4 தேர்வுகளில் அதிகமானோர் பங்கேற்பதற்கும், அரசு துறைகளில் 4 ஆம் நிலை பணியிடங்களை நிரப்பும் இந்த தேர்வுக்கு தான் போட்டி அதிகமாக உள்ளது. காரணம், 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த தேர்வை நீங்கள் எழுதலாம். மேலும் ஒரே ஒரு எழுத்து தேர்வுதான். அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டால், நீங்களும் அரசு அதிகாரி தான்.

இப்படி கடும் போட்டி நிறைந்த குரூப் 4 தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம், கட் ஆஃப் உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

குரூப் 4 பதவிகள்

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி

குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

மேலும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

பாடத்திட்டம்

முதல் பகுதியான மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழக அரசு, தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பாடத்திட்ட முறையில் மாற்றம் வந்தாலும் வரலாம்.

அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும்.

பொது அறிவு பகுதியில் கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில.

புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் மற்றும் சில.

வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.

இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில.

பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் சில.

இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.

திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் வரும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

கட் -ஆஃப்

குரூப் 4 தேர்வை பொறுத்தவரை  மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சிதான். ஆனால் போட்டித் தேர்வுகளை பொறுத்தவரை தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒரு அளவுகோல் மட்டுமே. அக்குறைந்தப்பட்ச மதிப்பெண்களை பெற்றால்தான் நீங்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு (சான்றிதழ் சரிபார்ப்பு) தகுதியானவர்கள். ஆனால் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் காலியிடங்களின் எண்ணிக்கைக்குள் வரும் அளவிற்கு மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை நாம் எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாதது எனினும் கடந்த ஆண்டுகளில், வேலை கிடைத்தவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு, கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடலாம். அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் பொதுப் பிரிவில் 164 வினாக்கள் சரியாக எழுதியவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது நீங்கள் 165 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிப்பது உங்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்யலாம். இந்த கட்-ஆஃப் மதிப்பெண் எண்கள் மாறுதலுக்கு உட்பட்டது. மற்றும் இன ரீதியான பிரிவு வாரியாக கட் –ஆஃப் மதிப்பெண் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.

கடந்த வருடம் குரூப் 4 தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டில் செப்டம்பரில் தேர்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை நடத்தப்படவில்லை. இந்தநிலையில் விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கு என்றே தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருப்பதால் இந்த முறை கடும் போட்டி இருக்கும். இருப்பினும் இந்த முறை அதிக காலியிடங்கள் நிரப்பப்படலாம் என்பதால், இப்போதிருந்தே தேர்வுக்கு தயாரானால், நீங்களும் அரசு அதிகாரி ஆகலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment