இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 40% குழந்தைகள் தான் இருக்கின்றனர் அப்படி இருக்கையில் அந்த குழந்தைகளின் நலன் சார்பாக அரசு என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அருணோதயா குழந்தைகள் நல அமைப்பு நிர்வாக இயக்குனர் விர்ஜில் டி சாமி கூறுகையில்,"குழந்தைகளை பற்றி நமக்கு விழிப்புணர்வு வேண்டும். இந்த மக்களவை தேர்தலில் அவர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்கள் தேவை என்பதை அவர்கள் தாமாகவே முன்வந்து கூறினர். நாங்கள் மூன்று நாட்கள் முகாம் நடத்தினோம், அதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிட்டத்தட்ட 61 குழந்தைகள் பங்குபெற்றனர். அவர்கள் முக்கியமான பிரச்சனைகளை கூறினார்கள். உயிர் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை போன்றவை அதில் இடம்பெற்றன. அவர்கள் கூறியதை கணக்கில் எடுத்து அதை வழிமுறைப்படுத்தி கோரிக்கைகளாக தொகுத்தோம்."
“பெண் சிசு கொலை, குழந்தை தொழிலாளிகள், குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை - இவை அணைத்தாலும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கு ஓட்டு உரிமை இல்லை, ஆனால் எங்கள் குறைகளை எடுத்து கூற அது தடையாக இருக்க கூடாது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்," என்கிறார் 12ம் வகுப்பை சேர்ந்த சந்திரிகா.
சந்திரிகா போன்று பல குழந்தைகள் தங்களது கருத்துகளை முன் வைத்தனர். இந்த நிகழ்சியை உலகளவில் புகழ் பெற்ற யூனிசெப் இணைந்து நடத்தியது.
https://www.facebook.com/IETamil/videos/2055442807908170/
குழந்தைகளின் கோரிக்கைகளை அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என்கிறார் யூனிசெப் அமைப்பின் தொடர்பு மற்றும் சிறப்பு ஆலோசனை நிபுணர் சுகத்தா ராய். இந்த நிகழ்ச்சி பற்றி அவர் கூறுகையில், "எங்களுக்கு பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இந்த ஆர்வமிக்க குழந்தைகளை கண்டெடுக்க உதவின. அவர்கள் இந்த குழந்தைகளுடன் அமர்ந்து மூன்று நாட்கள் ஆலோசனை நடத்தி அவர்களின் முக்கிய பிரச்சனைகளை ஆராய்ந்து கோரிக்கைகளாக தொகுக்க உதவினர். மேலும் இந்த குழந்தைகள் கேட்பது அனைத்துமே அடிப்படை தேவைகள் தான். பள்ளி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலோ, விளையாட ஒரு மைதானம் வேண்டும் என்று கேட்டால் அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். கேட்பது குழந்தைகளின் உரிமை, செயற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை."
இந்த தேர்தல் அறிக்கையை போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களிடமும் இந்த குழந்தைகள் அமைப்பு அளிக்க முடிவுசெய்துள்ளது. மேலும் இது சம்பந்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்திக்கவும் இந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.