Tamilnadu Assembly Election 2021 : தமிழக சட்டமன்றத் தேர்தல்அறிவிப்புக்கு முன்னதாக திமுக தனது பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியது. திமுக இவ்வளவு விரைவாக காங்கிரஸ் கட்சியிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் விவாதமாகியுள்ளது.
மேலும், திமுக கூட்டணியில், காங்கிரஸ் மட்டுமல்லாமல், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக என பல கட்சிகள் உள்ளன. ஆனால், திமுக காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது ஏன் என்று கூட்டணி கட்சிகளிடையே பேச்சு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுர்ஜித்வாலா, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செய்தியளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பேச்சுவார்த்தை சுமூகமாக மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார். மற்றபடி, தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை.
திமுக தனது கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளை விடுத்து முதலில் காங்கிரஸ் உடன் கூட்டணியையும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது என்று காங்கிரஸை முன்கூட்டியே கவனித்து வருகிறது.
இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சி. அதனால், காங்கிரஸ் கட்சியை பேசி கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைமை விரும்புகிறது. அதனால்தான், காங்கிரஸ் கட்சியுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மற்ற கூட்டணி கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடைபெறும். இது வழக்கமானதுதான். இதில் புதிய விஷயம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உம்மன் சாண்டி, சுர்ஜித்வாலா இருவரும் வந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து காங்கிரஸ் வட்டாரத்திடம் பேசினோம். இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், இது வழக்கமான ஒருநடைமுறைதான். காங்கிரஸ் தலைவர்கள் 50 சீட் கேட்டுள்ளார்கள். அவர்கள் (திமுக) 25-26 என்று சொல்வார்கள். அவர்கள் கொஞ்சம் ஏறிவர காங்கிரஸ் கொஞ்சம் இறங்கிவர என்று 35-30க்குள் உறுதியாகும். அதனால், இது ஒரு வழக்கமான நடைமுறை. தேசிய கட்சி என்பதால் இந்த நடைமுறை கொஞ்சம் சீக்கிரமாக தொடங்கியுள்ளது அவ்வளவுதான். மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"