General Election 2019 Interesting Facts Vellore Constituency : மார்ச் மாதம் 10ம் தேதி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்பு தேசம் முழுவதும் ஒரு மாபெரும் ஜனநாயக திருவிழாவிற்கு தன்னை தயார் செய்து கொண்டது என்று தான் கூற வேண்டும். 543 தொகுதிகள், 90 கோடி வாக்காளர்கள், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் மத்தியில் நடந்து முடிந்துவிட்டது இந்த மாபெரும் 17ம் நாடாளுமன்ற தேர்தல்.
General Election 2019 Interesting Facts Vellore Constituency
நேற்றைய தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி, தேசம் முழுவதும் நடைபெற்ற 542 தொகுதிகளுக்கான தேர்தலில் 67.11 % வாக்குகள் பதிவாகியுள்ளன. 2014ம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் இவை 1.16% அதிகம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அந்த 542 தொகுதிகளையும் விட்டுவிடுவோம். தேர்தல் நடக்காமல் போன அந்த ஒரு தொகுதி எது ? தமிழகத்தில் அமைந்திருக்கும் வேலூர் தொகுதி தான் அது. அளவுக்கு அதிகமான பணம், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட காரணத்தால், இங்கு தேர்தலை ரத்து செய்து அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக காரணம் என்ன?
இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த். மார்ச் மாதம் 29ம் தேதி துரை முருகனின் வீடு, அலுவலகம் ஆகியவற்றை வருமான வரித்துறை. துரைமுருகன் வீட்டில் இருந்து 10.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அவற்றிற்கு முறையான சான்றுகள் இருப்பதாக கூறப்பட்டது.
மார்ச் 30ம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பம் பகுதியில் அமைந்திருக்கும் திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் கீழ்மேட்டூரில் வசித்து வரும் அவருடைய சகோதரியின் வீட்டிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
காட்பாடி வஞ்சூர் பகுதியின் திமுக ஒன்றிய செயலாளர் பெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டிலும், கதிர் ஆனந்த் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. பள்ளிக்குப்பம் பகுதியில் அமைந்திருக்கும் சிமெண்ட் ஃபேக்ட்ரி ஒன்றில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் வார்டு வாரியாக பணம் பார்சல் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் வருமான வரித்துறையினர் தேர்தல் ஆணையத்திடம், வேலூரில் கைப்பற்ற பணம் குறித்த முழுமையான அறிக்கைகளை சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையம், இந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பினர். அவரின் ஒப்புதலோடு இந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக ஏப்ரல் 16ம் தேதி இரவு 07:30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
அன்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளரான கனிமொழி வீடு மற்றும் அலுவலகத்தின் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவருடைய வீட்டில் இருந்து பணம் எதுவும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர். சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலக்ஷ்மி உள்ளிட்டோர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டனர்.
மேலும் படிக்க : ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டமாக தேர்தல்! இந்திய வரலாற்றில் இது தான் முதல் முறை!