வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த வாரம் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் தேர்தல் ரத்து செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டார். முதல்கட்ட பிரச்சாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார். தொடர்ந்து, கடந்த மே 1ம் தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக தளங்களில் பரவியது. இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.
வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பி இருந்தது. கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்பிதல் அளித்தார். இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், வேலூருக்கு உட்பட்ட தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமைத தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.