விஜய், அஜித், சூர்யா நடிக்கும் படங்களில், இந்த வருட தீபாவளிக்கு யாருடைய படம் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், எடிட் செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.
‘விஜய் 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை அங்கு படமாக்க இருக்கிறார்கள்.
இந்த ஆக்ஷன் காட்சிகளை ராம் – லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வடிவமைத்துப் படமாக்க இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தெலுங்கில் பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாகப் பணியாற்றியுள்ளனர். ‘சரய்னோடு’, ‘ஜெய் லவகுசா’, ‘ஜெய் சிம்ஹா’ என பல படங்களில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். விஜய் நடிக்கும் படத்திற்கு முதன்முதலாக சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
சிவா – அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். அனிருத், அஜித்துக்காக இசையமைக்கும் மூன்றாவது படம் இது.
‘விசுவாசம்’ படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சத்யஜோதி ஃபிலிம்ஸ். ‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நயன்தாரா நடிக்கும் நான்காவது படம் இது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா.
சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்த மூன்று படங்களுமே தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி மூன்று படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாவது சாத்தியமில்லை. அப்படி ரிலீஸாகாமல் இருப்பதுதான் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என எல்லோருக்கும் நன்மை பயக்கும். எனவே, மேற்கண்ட மூன்று படங்களில் எந்தப் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.