நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திலிப் அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும், பாவனாவின் வீடியோவை, நடிகர் திலிப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சன் சுனி முன்னதாக கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவ்யா மாதவனின் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர்.
நடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து, திலீப்புக்கும், பல்சர் சுனிக்கும் இடையேயான தொடர்பு இருப்பது அம்பலமானது.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவானார்கள். இதையடுத்து, திலீப் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும், திலீப்பை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் அங்காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த இரண்டு நாள் காவல் கடந்த 15-ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தருணத்தில் திலீப்பை வெளியே விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் கடந்த 17-ஆம் தேதி ஜாமீன் கேட்டு திலீப் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, இன்று திலீப்பின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவரது ஜாமீனை மீண்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், திலீப் தரப்பு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.