மீரா கதிரவன் இயக்கி தயாரித்துள்ள படம் விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தன்ஷிகா, டி.ராஜேந்தர் பெயரை சொல்ல மறந்துவிட்டார். அதன்பின் இறுதியாக பேசிய டி.ஆர், "என்னை ஏன் லாஸ்ட்டா பேச சொன்னீங்க? நான் வேஸ்ட்? இல்ல நான் பெஸ்ட்.? இது எனக்கு நீங்க வைக்கிற டெஸ்ட்? என அவருக்கே உரிய பாணியில் அடுக்கு மொழியில் பேசினார்.
ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார் தன்ஷிகா. அவருக்கு என்னை யார் என்று தெரியாதாம். மல. மல. அண்ணாமலை. அந்த மலை கூட நடிச்சிட்டா? தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை. நீயெல்லாம் என் பெயரை சொல்லியா நான் வாழ போறேன். ஹன்சிகாவை பத்தியே கவலைப்படாதவன் நான்.. தன்ஷிகாவை பத்தியா கவலை பட போறேன்" என சரமாரியாக விளாசினார்.
அப்படி டி.ஆர்., பேசிக் கொண்டிருக்கும் போதே, நடுவில் குறிக்கிட்ட தன்ஷிகா, டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால், அதற்கும் அசராத டி.ஆர்., நீ கட்டி வரல சாரி. இப்போ சொல்ற சாரி என பேசியதால், நடிகை தன்ஷிகா கண்ணீர் விட்டு மேடையிலேயே அழுது விட்டார்.
இதையடுத்து, தன்ஷிகவிற்கு ஆதரவாக திரைத் துறையைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன. நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், டி.ஆரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதேபோல் இப்படத்தில் நடித்துள்ள வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வயதில் பெரியவர்களுக்கு எப்போதும் மரியாதை தர வேண்டும் என்று தான் என்னை வளர்த்திருக்கிறார்கள். டி.ஆர் அவரது எண்ணங்களை 'விழித்திரு' விழாவில் பேசியிருந்தார். முதலில் நாங்கள் கிண்டல் என நினைத்த ஒன்று போகப் போக தீவிரமடைந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
தன்ஷிகா துறைக்குப் புதியவர். பொது மேடையில் எப்படி பேச வேண்டும் என்ற அனுபவமற்றவர். ஒழுங்காக வழிநடத்துவது எங்களைப் போன்ற துறையில் மூத்தவர்களின் பொறுப்பு என நினைக்கிறேன்.
வழிகாட்டுதலே கடவுளின் செயலும். யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். காயப்படுத்துவதால் நமக்கு எதுவும் லாபமில்லை. இந்தக் கருத்தை நான் எப்போதும் போல மரியாதையுடன் வெளிப்படுத்துகிறேன்" என்று கூறியிருந்தார்.
இவ்வாறு இந்தப் பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்க, நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தல், "தனது பெயரைச் குறிப்பிடவில்லை என்பதால் டி.ஆர் சற்று அப்செட் ஆகிவிட்டார். தன்ஷிகாவும் அதற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டார். இதோடு இந்தப் பிரச்சனை முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன். இதற்குபின்னும் நாம் இதை உணர்வுப்பூர்வமான பிரச்சனையாக்க தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.