கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்த அமலா பால், தண்டனையில் இருந்து தப்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2010ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் நடிகையாகத் தமிழில் அறிமுகமானவர் அமலா பால். பின்னர் ‘மைனா’, ‘தெய்வ மகள்’, ‘தலைவா’, ‘நிமிர்ந்து நில்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘பசங்க 2’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பாபி சிம்ஹா ஜோடியாக இவர் நடித்துள்ள ‘திருட்டுப்பயலே 2’, டிசம்பர் மாதம் முதல் தேதி ரிலீஸாக இருக்கிறது. மேலும், அரவிந்த் சாமி ஜோடியாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திலும் நடித்துள்ளார்.
அமலா பால், கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மாத்ருபூமி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார் அமலா பால். ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்புடையது இந்தக் கார்.
கேரளாவைச் சேர்ந்த அமலா பால், அங்கு காரைப் பதிவு செய்தால் 20 லட்ச ரூபாயை வரியாகக் கட்ட வேண்டும். எனவே, புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். அங்கு பதிவுசெய்ய ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. ஆனால், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும்.
அமலா பாலின் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெரேசா தெருவைச் சேர்ந்த ஒரு இளைஞரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஞ்ஜினீயரிங் படித்துவரும் அந்த இளைஞருக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் கொடுமையான விஷயம்.
அமலா பாலின் இந்த செய்கையால், கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க நேரிடும். ஆனால், அபராதத்துடன் சேர்ந்து வரித்தொகையைச் செலுத்த அமலா பால் தரப்பு தயாராக இருப்பதால், சிறை தண்டனை வரை செல்லாது என்கிறார்கள்.