தமிழ் சினிமாவில் தமிழகத்தை சேர்ந்த நடிகைகளுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்களா? என்று பல ஆண்டுகளாக எழுப்பிக் கொண்டிருந்த கேள்விக்கு விடையாக வந்தவர், திரிஷா! அதற்கு பிறகும், தமிழ் வாடை அவ்வளவாக இல்லை. இப்போது அந்தக் குறையை போக்க வந்திருக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
இனி தமிழ் நடிகைளின் தாக்கம் தமிழ் சினிமாவில் இருக்கும் என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் உறுதி செய்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே நடித்து வருவதால் மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்த நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
கடந்த 40 வருடங்களை திரும்பிப் பார்த்தால், இது அபூர்வம். கவர்ச்சி, ஆர்டினரி ஹீரோயின் என்று தாண்டி வந்த பிறகே அனுபவம் தந்த பாடத்த்தால் சிறந்த நடிகைகள் பட்டியலில் இணைவர். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு விதிவிலக்காக திரையுலகினரால் பார்க்கப்படுகிறார்.
தர்மதுரையாகட்டும், வடசென்னையாகட்டும் அவரின் யதார்த்த நடிப்பு அவற்றில் பளிச்சிடுகிறது. மேலும் காக்காமுட்டை கதாபாத்திரம், வீடு படத்தில் தேசிய விருது வாங்கிய அர்ச்சனாவை நினைவு படுத்துகிறது. அந்த அளவு யதார்த்தம் கலந்த கதாபாத்திரமாக வாழும் நடிகைகள் தற்போது இருப்பதாக தெரியவில்லை.
சமீப காலமாக சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதாலும், கதைக்காக படம் ஓடுகின்ற நிலை வந்துவிட்டதாலும் தயாரிப்பாளர்கள் சிறு பட்ஜெட்டில் படம் எடுக்க விரும்புகின்றனர். அவர்களின் சாய்ஸாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். அவரும் அனைத்து பட வாய்ப்பையும் ஒத்துக்கொள்ளாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே தேர்ந்தெடுக்கிறார்.
கண்களை அதிகம் உறுத்தாத கதாநாயகிகள், தனி அழகுதானே!
திராவிட ஜீவா