‘வேலைக்காரன்’ படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றுள்ள நயன்தாரா, அங்குள்ள அஜ்மீர் தர்காவுக்குச் சென்று வழிபட்டார். அந்த புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கும் இந்தப் படத்தில், மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் எல்லா காட்சிகளும் எடுக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக ஒரு பாடலைப் படமாக்குவதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளது படக்குழு.
கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களில் பாடலைப் படமாக்கி வருகின்றனர். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார். படப்பிடிப்பு இடைவேளையின்போது, படக்குழுவினருடன் அங்குள்ள அஜ்மீர் தர்காவுக்குச் சென்றுள்ளார் நயன்தாரா.
முஸ்லிம் பெண்களைப் போல கறுப்பு நிற பர்தாவுடன் சென்ற நயன்தாரா, அவர்களைப் போலவே தலையில் முக்காடும் போட்டுக் கொண்டார். சிவகார்த்திகேயனும் முஸ்லிம் ஆண்களைப் போல தலையில் குல்லா வைத்திருந்தார். மலர்கள் உள்ளிட்ட பிரார்த்தனைப் பொருட்களை தர்காவுக்கு வழங்கிய நயன்தாரா, அங்கு நீண்ட நேரம் மனமுருகி பிரார்த்தனை செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா, ஒருகட்டத்தில் இந்து மதத்துக்கு மாறினார். தற்போது தர்காவுக்குச் சென்று, தான் மதச்சார்பற்றவள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தர்காவுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.