'பாகுபலி 2' எனும் பிரம்மாண்ட படைப்பு டோலிவுட், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் ரவுண்ட் கட்டி அடித்து வருகிறது. வசூலில் இன்னமும் பின்வாங்காமல் 'செம' என்று சொல்லும் அளவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஆயிரம் கோடி வசூலைத் தாண்டிய முதல் திரைப்படம் எனும் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. பல துறையைச் சேர்ந்தவர்கள் கூட இப்படத்தின் வெற்றியைப் பாராட்டி வரும் நிலையில், சினிமாத்துறையில் இருக்கும் சில முக்கிய பிரபலங்களே இதுவரை இப்படம் குறித்து வாய்த் திறக்கவேயில்லை.
'பிக் பி' என்று செல்லமாக பாலிவுட்டில் அழைக்கப்படும் அமிதாப் பச்சனும் சரி, மூன்று கான்களும் சரி.. (அதாங்க..! சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான்..) இவர்களில் ஒருவர் கூட இதுவரை பாகுபலி 2 குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், பாலிவுட்டின் மற்றொரு நட்சத்திரமும், ரஜினியின் 2.o படத்தின் வில்லனுமான அக்ஷ்ய் குமார் இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒருவழியாக 'பாகுபலி' படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கும், அதன் வெற்றிக்கும் தகுதியானது பாகுபலி. இந்தப் படம், இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' எனப் புகழ்ந்துள்ளார்.
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் யாரும் பாகுபலி 2 படத்தை பாராட்டாத நிலையில், அக்ஷ்ய் குமாரின் இந்த டீவீட்டிற்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.