ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர் என்று எவராவது இருக்க முடியுமா? அல்லது அவரது இசையை விரும்பாமல் தான் இருக்க முடியுமா? ஆஸ்கர் விருது வரை வென்று, இன்று வரை இளம் தலைமுறை இசையமைப்பாளருக்கும் கடும் சவாலாக விளங்குகிறார் என்றால் அது எத்தகைய பெரிய சாதனை!
'ரோஜா' படத்தில் முதன்முறையாக இசையமைக்க ஆரம்பித்து இன்று 'மெர்சல்' வரை மெர்சலாக இசையமைத்து வருவதே அதற்கு சான்று. தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டின் பல வெற்றிப் படங்களுக்கு, மெகா வெற்றிப் பாடல்களை ரஹ்மான் கொடுத்துள்ளார்.
ரங் தே பஸந்தி, தில் சே, டால், லகான், குரு, ஜோதா அக்பர் ஆகிய படங்களின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்வேட்ஸ், பாம்பே, ராக்ஸ்டார், ஸ்லம்டாக் மில்லியனர் ஆகிய பல படங்கள் இவரது டாப் ஹிட் லிஸ்டில் இருப்பவை. இதில், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காகத் தான் ஆஸ்கர் விருதை ரஹ்மான் வென்றார்.
இவ்வளவு வெற்றிகளையும், சாதனைகளையும் தன் வசம் வைத்திருக்கும் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான பல கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் பேசிய போது, "எப்போதும் எனது இசைக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. சிலர் நன்றாக இருக்கிறது என்பார்கள். சிலர் மோசமாக உள்ளது என்பார்கள். 'ரோஜா' படம் ரிலீசான போது பலரும், 'நான் மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டேன்' என்றார்கள்.
பின், 'பாம்பே' படம் ரிலீசான போது 'இது என்ன இசையா?' என மக்கள் கேட்டனர். அதன்பிறகு பல படங்களுக்கு நான் இசையமைத்துவிட்டேன். மக்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். உள்ளார்த்தமாக எப்போதும் நான் எனது வேலையை நேர்மையுடன் செய்யவே நினைப்பேன். அதன்படிதான் அந்த வேலையை செய்து முடிப்பேன். என்னுடைய சில படங்களின் இசையை ரசிகர்கள் விரும்பவில்லை என்பது உண்மை. ஒரு தொழில்முறை இசையமைப்பாளராக வேண்டும் என முடிவு செய்த போது, 'எதிர்கால வாழ்க்கைக்கு இது நல்ல முடிவல்ல. உனது கேரியரில் இது நல்ல மாற்றம் கிடையாது' என பலரும் கூறினார்கள். இசையமைப்பாளராக ஆவதால் எந்த முன்னேற்றமும் இருக்காது என்றனர்.
'முதலில் உனக்கென்று ஒரு நிரந்தரமான வேலையைப் பார். இசை என்பதை பகுதி நேர வேலையாக வைத்துக் கொள்' என பலரும் அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் எனது முடிவில் தெளிவாக இருந்தேன். இப்போது கூட இசை சம்பந்தமான படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஹாலிவுட் படங்களைப் பார்த்துதான் இதுபோன்றவொரு முயற்சியை எடுத்து வருகிறேன்" என்றார்.
ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்' எனும் இசைப் கச்சேரிப் படம் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.