சென்னை: இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது பாகுபலி-2. நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், நாசர் மற்றும் நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே பாகுபலியின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. எனவே பாகுபலியின்-2-ம் பாகத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு பாகுபலியின் இரண்டாவது பாகம் உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். பாகுபலியின் முதல் பாகமே பிரம்மாண்டமாக இருந்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என நினைத்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். எனவே வசூலை அள்ளும் நோக்கில் பாகுபலி-2 இந்தியாவில் மட்டும் சுமார் 6,500 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
முன்னதாக, காவிரி விவகாரத்தில், கடந்த 9-வருடங்களுக்கு முன்னர் 'கட்டப்பா' சத்யராஜ் தெரிவித்த கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. சத்யராஜ் மன்னிப்பு தெரிவித்தால் தான் பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் ஆக விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்திருந்ததோடு, பந்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன.
இது தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு சத்யராஜும் வருத்தம் தெரிவிக்கவே, அந்த பிரச்சனை அத்தோடு முடிந்து விட்டதாக தெரிகிறது. இதன் பின்னர் சத்யராஜின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்தது நினைவிலிருக்கலாம். இந்நிலையில், பெங்களூருவில் பாகுபலி-2 திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்கள் முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இதன் காரணமாக வார விடுமுறை நாட்களில் டிக்கெட் ஏறக்குறைய அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். இதே நிலை தான் கேரளாவிலும் பாகுபலி-2-க்கு இருக்கும் டிமான்ட்.
பாகுபலி-2 தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,100 திரையரங்குகளில் வெளிவருகிறது. இதேபோல, இந்த பிரம்மாண்ட படமானது கனடாவில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், அப்பகுதிகளில் அப்படியே ஐமேக்ஸ் தொழிற்நுட்பத்தில் வெளிவரும் முதல் படம் பாகுபலி-2 என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சுமார் 40-முதல் 45 முக்கிய பகுதிகளில் பாகுபலி-2 ஐமேக்ஸ் தொழிற்நுட்பத்தில் வெளிவருகிறது.
ஹிந்தி மொழியில் வெளியிடப்படும் பாகுபலி-2 நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஃபிஜி தீவுகள் ஆகியவற்றில் அதிக திரையரங்குகளில் வெளிவர காத்திருக்கிறது. இதேபோல மலேசியாவில் தமிழில், அதிக திரையரங்குகளை ஆக்கிரமிக்கவுள்ளது பாகுபலி-2 .
பாகுபலியின் இரண்டாவது பாகத்தின் நீளம் 2.50 மணி நேரமாகும் இது பாகுபலியின் முதல் பாகத்தை காட்டிலும் அதிகம். ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாகுபலியின் முதல் பாகம் 2.38 மணி நேரமாகும்.
பாகுபலியின்-2-வது பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் சுமார் ரூ.30-கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வந்த பிரபாஸ், சில வருடங்களாக ஒரு படங்களில் கூட இதுவரை ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லையாம். பாகுபலிக்காக பிரபாஸ் மற்ற படங்களில் நடிப்பததை தவிர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.