விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு சீசனுமே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற தவறுதில்லை. குறிப்பாக வார நாட்களில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதே பார்க்கவே தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டமே உள்ளது.
அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆரம்பத்தில் போட்டியாளர்களின் உடைகளை பார்த்த, மக்கள் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பிறகு, சில போட்டியாளர்களின் நடத்தை, அவர்களின் பேச்சுகளும் பெரியளவில் விமர்சனங்களுக்கு ஆளாகியது.
இவ்வளவு நெகட்டிவிட்டிக்கு மத்தியிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி இப்போது தமிழக மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக மாறிவிட்டது. ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும் போதும், இம்முறை போட்டிக்கு யாரெல்லாம் வருவார்கள் என்பதில் ஆரம்பித்து, தங்களுக்கு பிடித்தவர்களுக்காக சோஷியல் மீடியாவில் ஆர்மிக்கள் ஆரம்பித்து, அவர்கள் வெற்றி வாகை சூடுவதை பார்க்குவரை' ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சி, அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பல பல யூடியூபர்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் இலவசமாக கன்டென்ட் கொடுத்து அவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தி வருகிறது.
இப்படி ஒரு நிலையில் தான், தமிழ் ஒ.டி.டி. வரலாற்றில் புதிய முயற்சியாக, பிபி அல்டிமேட் நிகழ்ச்சி, கடந்த ஜன.30 அன்று தொடங்கியது. டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில்’ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இதையும், வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி 48 நாட்கள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
இதில் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி என கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் இந்நிகழ்ச்சி எதிர்ப்பார்த்த அளவு மக்களை சென்றடையவில்லை என்றுதான் கூற வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியை டிவியில் பார்த்தே பழகிய மக்கள், பிபி அல்டிமேட்டை ஆப்பில் பார்ப்பதை பெரிதும் விரும்பவில்லை என்று சொல்லலாம்.
தீவிர பிக்பாஸ் ரசிகர்கள் மட்டும் போனில் தனியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை டவுன்லோட் செய்து, அவ்வபோது நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை கமெண்ட் மூலம் மற்றவர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். இப்படித்தான் பிபி அல்டிமேட் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் சிலர், ப்ரோமோக்களை மட்டும் பார்த்து வீட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்கின்றனர். அப்படி ஒரு புரோமோ தான் நேற்று வைரலாகியது. பிபி அல்டிமேட் ஆரம்பித்த நாள் முதல் அனைத்து புரோமோக்களிலும் வனிதா, வெவ்வேறு போட்டியாளர்களுடன் சண்டை போடும் காட்சிகள் பெரும்பாலும் இடம்பெற்றன.
போட்டி ஆரம்பித்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் எப்போது பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் சண்டையா என ரசிகர்களே வெறுத்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று வெளியான புரோமோ ரசிகர்களை சற்று திகைக்க வைத்துள்ளது என கூறலாம்.
நேற்று மாலை கடைசியாக வந்த புரோமோவில், உங்களுக்கு இங்க என்ன வேணும் டாஸ்கில்’ பத்திரிக்கையாளராக இருக்கும் தாமரை, பிபி செலிபிரிட்டி சுருதியிடம் கேள்விகளை கேட்கிறார். அப்போது தன்னை அபிநய் பார்ப்பதை பார்த்த தாமரை, அவரிடம் ஏன் கேவலமாக முழிக்கிறீங்க என கேட்க, அதற்கு அபிநய் நீங்க ஏன் என்னை பார்க்குறீங்க, அங்கு பார்த்து கேள்வி கேளுங்க என சொல்ல அதற்கு, தாமரை, சாதாரணமாக பார்ப்பதற்கும், கேவலமாக பார்ப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் என்கிறார்.
இவ்வளவு நாட்களாக வனிதா மற்ற போட்டியாளர்கள் மாறிமாறி சண்டை போடும் புரோமோக்கள் தான் வந்தது. ஆனால் நேற்று, தாமரையே கடுப்பாகி அபிநய்யிடம் சண்டை போடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சபாஷ் தாமரை என நீங்களும் வரவர வனிதா இடத்தை பிடிச்சீட்டிங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தற்போதைய தகவலின்படி, வனிதா தான் ஓட்டு சதவீதத்தில் கடைசியில் இருக்கிறார். ஆனால் வீட்டில் இருப்பாரா? அல்லது வெளியே போவாரா என்பது வார இறுதியில் தான் தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.