Bigg Boss 4 Tamil Review Day 56 : வெளியேறப்போவது ரமேஷா அல்லது சம்யுக்தாவா என்று இரண்டு நாள்களாகக் குழப்பிக்கொண்டிருந்த கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. என்றாலும், கமலின் பங்களிப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும் உண்மையில் சரியானதாக இருந்ததா? ஓரளவிற்குப் பரவாயில்லை ரகம்! கமலின் சாமர்த்திய பேச்சு ஹவுஸ்மேட்ஸுக்கு புரிஞ்சிருக்குமா இல்லையா என்பது இன்று நிகழ்ச்சிப் பார்த்தால்தான் தெரியும். சரி வாங்க இந்த சீஸனின் முதல் குறும்படம் பற்றி விவாதிப்போம்.
பிக் பாஸ் சீசன் 4 வீட்டில் மற்றவர்களைச் செயலாலும் சொற்களாலும் புண்படுத்துபவர் பாலா என்றால், சொல்கிற சொற்களை வேறு திசையில் எடுத்துக்கொண்டு அதற்காகச் சண்டைபோட்டு ரணகளப்படுத்துபவர் சம்யுக்தா. இதற்குமுன் நடைபெற்ற சீசன்களில் காயத்ரி போன்ற சிலர் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருந்தாலும், சம்யுக்தா அளவிற்கு இல்லை. இவர் ஒரு படி மேலே சென்று, 'வளர்ப்பு' என்கிற மிகவும் தனிப்பட்ட மற்றும் மற்றவர்களின் குடும்பங்களைக் குறை கூறும் தொனியில் பேசுகிறார். இதனைக் கமல் எடுத்துரைத்த விதம் அருமை. சொல்கிற விஷயம் எதுவாக இருந்தாலும், அதன் தொனி மிகவும் ஆபத்தானது என்று கமல் கூறியதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், சம்யுக்தா அதனை உள்வாங்கியதாகத் தெரியவில்லை. இறுதிவரை தன் தவறை உணர்ந்து ஆரியிடம் மன்னிப்பு கேட்டதாகவுமில்லை. (ஹ்ம்ம் என்னவோ போங்க!)
Bigg Boss 4 Tamil Vijay Tv Samyuktha
அதேபோல 'கலீஜ்' என்ற வார்த்தையை சனம் ஷெட்டியிடம் சம்யுக்தா உபயோகித்ததையும் குறிப்பிட்டுக் காட்டினார் கமல். அதற்காக வருத்தப்பட்ட சம்யுக்தா, சனமிடம் மன்னிப்புக் கேட்டார். 'இந்த சாரி பூரி எல்லாம் என் முன்னாடி கேட்டுடுறீங்களே மத்த நேரத்துல கேப்பீங்களா?' என்ற கமலின் கேள்விக்கு, போட்டியாளர்கள் அனைவரின் முகமும் இஞ்சி தின்றதைப்போல மாறியது. எதிர்பார்கலல!
என்னதான் சொல்லுங்க இந்த குறும்படம் காட்டியதில் சம்யுக்தாவைவிட பீதியடைந்தனர் அர்ச்சனாதான். சம்யுக்தாவிற்கு 'சிங்க்சாங்' போட்டுக்கொண்டிருப்பதைக் காட்டிய அர்ச்சனாவின் பாணியில் குருமா படத்தைத் தொடர்ந்து, ஏதேதோ உலரத் தொடங்கினார் அர்ச்சனா. பாவம், இப்படி போட்டுக்கொடுத்துட்டாங்களே!
Bigg Boss 4 Tamil Vijay Tv Archana
சனிக்கிழமை எபிசோடில் அமைதியின் ஸ்வரூபமாய் அமர்ந்திருந்த ரம்யா நேற்று மாட்டிக்கொண்டார். வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவரையும் நாமினேட் செய்யக் காரணங்கள் கேட்டதற்கு, பாலாவுக்கு எந்தக் காரணமும் இல்லை எனக்கூறியது, ரம்யா எவ்வளவு பெரிய கில்லாடி என்பதைக் காட்டியது. வார்த்தைகள் முதல் கால் நீட்டிக் காட்டும் முரட்டுத்தனமான செயல்கள் வரை பாலாவை நாமினேட் செய்ய, சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எதுவுமே இல்லை எனக் கூறுவது, ஒருதலைபட்ச சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. இதில் 'நடுநிலை' என்று தனக்கு தானே பட்டமளித்துக்கொள்வது வேறு!
மேலும், ரியோவின் கடந்த வார கேப்டன்சிக்கு போட்டியாளர்கள் அனைவரும் மதிப்பெண்கள் வழங்கியபோது, 'மதிப்பெண்கள் எதுவும் இல்லை ஆனால், போனாப்போகுதுனு ஒரு மதிப்பெண் கொடுக்கிறேன்' என வழங்கினார் ரம்யா. பொறுப்புகளில் இருந்துகொண்டு மற்ற வேலைகளையும் கையாண்டதை நாங்களும் பார்த்தோம் ரம்யா! பாலாவின் அராஜக செயல்களைவிட ரியோ தரம் தாளவில்லை. கொஞ்சம் ஓவராத்தான் போறீங்களோ!
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
ஆனால், அதற்கு அப்படியே நேர்மாறாக, அதிகபட்ச ஐந்து மதிப்பெண்களையும் ரியோவிற்கு வழங்கி புல்லரிக்கச் செய்துவிட்டார் பாலா. தலைவன் முழிச்சுட்டான்யா! இனி பாலாவின் ஆட்டம் கொஞ்சம் வேற டிராக்கில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அன்பு வேண்டாம் வீட்டுக்கு வெளியே பார்த்துக்கொள்ளலாம் என்றுகூறும் பாலா, சம்யுக்தாவிற்காக அழுதது, அவருடைய ஆழ் மனதை வெளிப்படுத்தியது. என்றாலும், அனிதா தன்னால்தான் சம்யுக்தா வெளியேறினார் என்று புலம்பி பாலாவிடம் சாரி கேட்டபோது, கவலையே படாதது போல பதிலளித்தார் (வேற லெவல் நடிப்புஜி!).
அனிதாவின் ஃபீலிங்கான நடிப்பு, பக்கா மாஸ். பார்வையாளர்களின் பார்வையை இப்போது நன்கு கணித்து வைத்திருப்பார். பத்திரமா இருங்க அனிதா! இந்த வாரம் ரமேஷ் கேப்டன் ஆகிவிட்டால், நீங்கதான் அவுட். இன்றைக்கு யார் நாமினேட் ஆகப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"