Bigg Boss 4 Tamil Review Day 62 : இத்தனை வாரங்களிலேயே நேற்றுதான் ஏதோ நம் மனம் ஆறுதல் அடையும்படியாக கமல் எபிசோட் இருந்தது. 'எப்போ பார்த்தாலும் பாலா செய்கிற தவறுகளுக்கு மற்றவர்களையே குறிப்பிடுகிறார் ஏன் பாலாவை மட்டும் வீட்டிலிருக்கும் கன்டஸ்டென்ட் முதல் கமல் வரை ஒருதலை பட்சமாகவே பார்க்கிறார்கள்' என்கிற ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருந்தது. அது ஓரளவிற்கு நேற்றைய பொழுது தணித்தது. ஆரியிடம் கால்களைத் தூக்கிக் காட்டிய செயலுக்குத்தான் எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்தார், இந்த வாரமும் தன் செருப்பை ஆயுதமாகப் பயன்படுத்தியதற்கு பாலாவை ஏதாவது சொல்வாரா என்கிற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டார் கமல்.
முந்தைய நாளின் கன்ஃபெஷன் அறை டாஸ்க்கோடு ஆரம்பமானது அறுபத்து ஒன்றாம் நாள். ஷிவானி, ரம்யா பாண்டியன், கேபி, ஆஜீத், சோம் என அனைவரையும் கலாய்த்த பிக் பாஸ், அனிதாவின் நீண்ட உரையை எந்த கேலியும் செய்யவில்லை. அனிதாவின் சிரிப்பைக் கண்டு பயந்துவிட்டாரோ! ஹ்ம்ம் ரொம்ப ஹாப்பி போல பிக் பாஸ்!
அகம் திரை வழியே நுழைந்த கமல், சனம் ஷெட்டியின் விட்டுப்போன கால் சென்டர் டாஸ்க்கை செய்யச்சொன்னார். மறுமுனையில் ரமேஷ். வழக்கம்போல தடுமாற்றம். எப்படியோ இந்த வாரம் வெளியேற்றப்போகும் சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு வழங்கி மரியாதை செய்துவிட்டனர் பிபி டீம். முதல் நாள் முதல் அறுபது நாள் வரையிலான சனம் ஷெட்டியின் மாற்றத்தின் அளவு உண்மையில் மிக அதிகம். ரம்யா பாண்டியன், ஷிவானி என மக்களின் பார்வையில் தகுதியற்ற போட்டியாளர்களை இறுதிச்சுற்று வரை கொண்டு செல்லும்போது, எண்ணிக்கையில்லா முறைகள் நாமினேட் ஆகி மக்களைச் சந்தித்து மீண்டும் மீண்டும் போராடும் சனம் ஷெட்டி உண்மையில் ஸ்ட்ராங் போட்டியாளர். அனிதா எப்படி எஸ்கேப் ஆனார் என்பதுதான் புலப்படவேயில்லை!
எப்போதும் இல்லாமால், பாலாவுக்கான ஏராளமான கவுன்ட்டர்ஸ்களை அள்ளி வீசினார் கமல். வெறும் சொல்லோடு விட்டுவிடாமல், குறும்படத்தையும் ஓட்டி காட்டினார். தன்னைவிட யாரும் இந்த வீட்டில் உண்மையானவர்கள் அல்ல என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் பாலாவின் மூக்கு உடைபட்டது. ஆனாலும், ஆரியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. ரொம்ப உணர்ச்சிவசப்படாதிங்க ப்ரோ. அப்புறம் வேற எதையாவது பாலா நீட்டிட போறாரு!
'சனம் ஷெட்டியோடு பேசுவதைவிட செருப்பில் அடித்துக்கொள்ளலாம்' என்று தன்னைத்தானே அடித்துக்கொண்ட கீழ்த்தரமான செயலைப் பற்றி நீண்ட விவாதம் சென்றது. என்னதான் சொல்லுங்க, இறுதிவரை தான் செய்த தவற்றுக்காக சனமிடம் பாலா மன்னிப்புக் கேட்கவே இல்லை. கமல் மேலோட்டமாக தன்னை மன்னிக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்ள, 'சரி நானும் சொல்லுறேன் மன்னிச்சுக்க' என்ற பாலாவின் மன்னிப்பில் உணர்ச்சியே இல்லை. 'இதுக்கு நீங்க கேட்காமலேயே இருந்திருக்கலாம் பாலா!'
இதையெல்லாம்விட சைடு கேப்பில் அர்ச்சனாவின் நடிப்பு, வேற லெவல். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சனம் ஷெட்டி சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு ஓரமாய் சென்று உட்கார்ந்து 'இந்த வீட்டில யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தெரியாதா' என்று வசனம் பேசிக்கொண்டிருந்தார் அர்ச்சனா. அப்போது அவர் கண்முன் நடந்த சம்பவம் தெரியாமலா இருக்கும் அவருக்கு! என்ன ஒரு சமாளிப்பு! என்ன ஒரு நடிப்பு! கமல் கேட்டபிறகு அவர் பயன்படுத்திய ஸ்ட்ராட்டஜி 'ராஜமாதா' ரகம். நடத்துங்க நடத்துங்க!
'ரேட்டிங் போடலாம்' எனக் கமல் சொல்லி, நேற்றைய எபிசோடில் அதைப்பற்றிப் பேசவே இல்லை. இன்றைக்கு அந்த டாஸ்க் தொடருமா என்பதைப் பார்க்கலாம். இந்த வாரம் சனம் ஷெட்டி வீட்டை வெளியேறுவது சரியா? உங்களுடைய பார்வையையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.