Bigg Boss 4 Tamil Review Day 31: கன்டென்ட் இல்ல கன்டென்ட் இல்ல னு பொலம்பிட்டு இருந்ததுக்கு, எல்லா நாட்களுக்கும் சேர்த்து வெச்சு ஒன்றரை மணிநேரத்தில் முழு கன்டென்ட்டை கொடுத்துவிட்டார் கில்லாடி பிக் பாஸ். சனம் ஷெட்டி, ஆரி, சுச்சி, பாலா, சம்யுக்தா, ரியோ, சுரேஷ், கேபி, அர்ச்சனா, ஷிவானி, ரம்யா என அத்தனை பேரும் கன்டென்ட் கொடுத்தனர். சொல்ல மறந்தாச்சே! ஆஜீத் மற்றும் நிஷா கூட நேற்று முக்கிய கன்டென்ட்டை கொடுத்து மீம்களில் வர ஆரம்பித்துவிட்டனர். வாங்க வாங்க சட்டுபுட்டுனு பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிடுவோம்!
‘சாம தான வேத தண்டம் நாளும் கோர்த்துப் போகும்போது தகுடு தத்தம்..’ என முந்தைய நாள் சுரேஷ் தாத்தா சொல்லிக்கொண்டிருந்ததைப் பாட்டாகவே பாடிவிட்டார் பிக் பாஸ். இந்தப் பாடலோடு 31-ம் நாள் தொடங்கியது. சும்மா ருத்ரதாண்டவம் ஆடியது வீடு. சுரேஷின் ஜோசியம் பார்க்கும் டாஸ்க்கோடு ஸ்டார்ட் ஆனது அவர்களுடைய டாஸ்க். ‘இந்த வாரம் மாஞ்சா கயிறு புட்டுக்கும்’னு எதனால் சோம் சேகரைப் பார்த்து சுரேஷ் சொன்னார் என்பது தெரியவில்லை. ஒருவேளை ‘நீதான் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போற’னு சொல்லாமல் சொல்லுறாரோ தாத்தா?! ஹ்ம்ம்… பிக் பாஸுக்குதான் வெளிச்சம்!
நிஷா, அனிதா, ரம்யா என அனைவரையும் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார் சுரேஷ். நீங்க எவ்வளவு பெரிய ரசிகன் என்பது நன்றாகவே தெரிகிறது தாத்தா! அதேபோல சுரேஷ் அவருடைய விளையாட்டையும் நன்றாகவே விளையாடுகிறார். பேத்தி கொடுத்த புகார் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாத தாத்தா, கூண்டுக்குள் நின்ற நொடியிலிருந்தே கடுப்பில்தான் இருந்தார். பத்தாததுக்கு கேபி தரப்பில் ஆஜரான சம்யுக்தா விளையாட்டாக ‘குசும்பு தாத்தா’ என்றுகூற, மேலும் கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கிவிட்டார் தாத்தா. அர்ச்சனா என்ட்ரியிலிருந்து மௌனமான சுரேஷ் இப்போதான் பழைய தா(த்)தாவாக மாறினார். அப்போ தாத்தா-பேத்தி பாசம், பேக் கிரவுண்ட்ல ‘ஆராரோ ஆரிராரோ..’ பாட்டெல்லாம் போட்டது வேஸ்ட்டா! பாவம் கேபி! உங்களையே நினைச்சு பாலாவை கண்டுக்காம போய்ட்டாங்க! (சுரேஷ் ஆர்மி வாழ்க! வாழ்க!)
சோம் சேகருக்கு பேசுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தும், அவர் தனக்காகூட உறுதியாக நிற்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பாலாவை எதிர்த்து தன் பக்கம் நியாயம் இருந்தபோதிலும், பாலா பேசத்தொடங்கியதும் தன்னிலையை முன் எடுத்து வைப்பதில் ஏனோ மௌனம் காத்துக்கொண்டிருந்தார். ஆனால், சும்மா விடுவார்களா சோமின் ஆதரவாளர்கள். அதிலும் ரியோ மற்றும் ரம்யா பாண்டியனின் வாதங்கள், ‘சும்மா அதிருதுல்ல’ ரகம். ‘குழந்தை’னு சொன்னா பாலாவுக்கு கோவம் வரலாம், தலையாட்டி பொம்மைன்னு சொன்னா சோம் சேகருக்கு கோவம் வரக்கூடாதா’ என ரியோ முன்வைத்த பாயின்ட், நெத்தியடி! என்னதான் இப்படித் தரமான வாதங்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? ஒருதலைபட்ச நீதிபதி பாலா பக்கமே தீர்ப்பு வழங்கினார். இது சுச்சியின் கேம் பிளான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. (நீங்க நடத்துங்க சுச்சி).
வீட்டில் இருக்கும் அனைவருமே கூச்சலிட்டுக்கொண்டனர். அவ்வளவு ஏன், ஆரி பேசும்போது பாலாவும் நடுவில் முணுமுணுத்தார். அதுவும் வாதமாக மாறியது. அப்பொழுதெல்லாம் டென்ஷன் ஆகாத ஒருதலைபட்ச நீதிபதி, சனம் பேசும்போது மட்டும் மேஜையை ‘டொக்கு டொக்கு டொக்கு’ எனத் தட்டுவது நியாயமா? ஆனால், அந்நிலையில் சனம் ஷெட்டிக்காக ஆதரவளித்துப் பேசிய நிஷாவுக்கு பாராட்டுகள்! (இப்பொழுதாவது தனித்துப் பேசினாரே! சந்தோஷம், சந்தோஷம்!).
அடுத்ததாக ஆரி மற்றும் சம்யுக்தாவின் வழக்கு. பாலா விட்டுக்கொடுத்துப் பதவிக்கு வந்தவர் சம்யுக்தா. அவரை கேப்டன் ஆக்கியதில் பாலாவுக்கும் சுயநலம் உள்ளது. ஒருதலைபட்சமாக முடிவெடுத்தால், ஆதரவாளர்களுக்குக் கசக்குமா என்ன! ஆரி முன்வைத்த எந்த கேள்விக்கும் நியாயமான பதில் சம்யுக்தா தரப்பிலிருந்து வரவில்லை. என்றாலும், ஒருதலைபட்ச நீதிபதியின் தீர்ப்பு சம்யுக்தா பக்கத்திற்கு சாதகமாகவே இருந்தது. பாலா பக்கம்தான் இதுநாள் வரை நீதிபதியின் தீர்ப்புகள் இருந்துள்ளன. அர்ச்சனா சொன்னதுபோல நீதிபதிக்கே தனி வழக்குத் தொடரவேண்டும். என்னதான் சொல்லுங்க, கைதூக்கச் சொல்லி நீதி எழுதும் நீதிபதியை இங்குதான் பார்க்கமுடியும்! இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்.
‘பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவன்’னு சம்யுக்தா ஆரியை சொன்னதெல்லாம் இருக்கட்டும். ஆனால், அந்த ‘மரியாதை என்றால் என்ன?’ என்ற குழுவின் தலைவன் பாலா என்பதையும் சம்யுக்தா மனதில் வைத்துக்கொண்டால் சிறப்பு. ‘தறுதலை’ என்ற வார்த்தை சனம் ஷெட்டியை பாலா சொன்னபோது தவறாகத் தெரியவில்லையா வீட்டில் யாருக்கும்? அதனைச் சபை முன்பு ஆரி விவாதம் செய்தால் மட்டும் அனைவர்க்கும் தவறாகப் படுகிறது! (என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்!).
வீட்டில் இருக்கும் அனைவரும் ஆரியை தனிமைப்படுத்திய போதும், எந்த ஒரு இழிவு சொற்களையும் அவர் பயன்படுத்தவில்லை. ஆனால், பாலா பயன்படுத்திய தீய வார்த்தைகளின் லிஸ்ட் எண்ணமுடியாதவை. வீட்டின் இந்த சூழ்நிலையை இவர்களின் காதல் மாற்றும் என்று நினைத்திருப்பாரோ என்னவோ, ப்ரோமோவில் ஷிவானி-பாலா காதல் டிராக்கை போட்டிக்காட்டிய பிக் பாஸ் நேரலையில் ஏமாற்றிவிட்டார். பாலா அவ்வளவு சின்ஸியராக ஷிவானியிடம் பேசிக்கொண்டிருந்தது, ‘கேபி தன் பக்கம் நிற்கவில்லையே. கூட இருந்துகொண்டே குழி பறிக்கிறாளோ’ என்பதுதான். இதுத் தெரியாத கேபி, வெளியிலிருந்துகொண்டு பொங்கிப்பொங்கி எழுகிறார். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகவே பயன்படுத்திக்கொண்டார் ஆஜீத். (நீ நடந்து தல!)
ஆக, மக்களின் வெறுப்புகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது பாலாவின் குழு! இதனால், ஆரி, சனம் ஷெட்டிக்கு ஆதரவாளர்கள் வெளியே பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சண்டைகள் ஒருபக்கம் இருந்தாலும், இறுதியில் சம்யுக்தாவின் மகன் பிறந்தநாள் காணொளியைக் காட்டி, வீட்டை வேறு மோடுக்கு மாற்றிவிட்டார் பிக் பாஸ். ஆனால், சென்ற வாரம் முழுக்க பிஸியாக இருந்த அர்ச்சனா இந்த வாரம், இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டார்.வீட்டில் மேலும் புது வரவு வரப்போகிறது என்கிற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதுவும் ஷிவானியின் ஆன்-ஸ்க்ரீன் ஜோடி வேறு. என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss 4 tamil vijay tv sanam bala aari samyuktha suchi day 31 review
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!