Bigg Boss 5 Tamil Day 2 Review Abishek Raju Isaivani Priyanka Tamil News : ஏற்கெனவே பிக் பாஸ் பற்றி விமர்சித்து ஓர் மேடையில் பேசிய காணொளி வைரலாக பரவிக்கொண்டிருக்க, அதற்கேற்றபடி பிக் பாஸ் வீட்டிற்குள் கன்டென்ட்டுகளை அடுக்கிக்கொண்டிருக்கிறார் அபிஷேக். கூடிய விரைவில் பிரியங்காவிற்கும் அபிஷேக்கிற்கும் வாய்க்கால் தகராறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. மற்ற சீசன்களை விட அறிமுகம் இல்லாத முகங்களின் பங்களிப்பு சுவாரசியமாக இருக்கிறதா? பார்க்கலாம்...
'வேற மாறி...' பாடலுக்கு வீட்டில் இருந்த 18 பெரும் வெவ்வேறு மாறி ஆடியபடி அவர்களின் காலை விடிந்தது. முதல் வாரம் என்பதால், காலையில் செய்வதற்கு பிக் பாஸ் எந்தவித டாஸ்க்கும் கொடுக்கவில்லை போல. அதனால், சீரியல்களில் வருவது போல நாம் இப்போது இருக்கலாமா என்று பிரியங்கா மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கேட்க, அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்தார் சிபி. 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்' என்கிற உலகத்தில் ஊறிப்போனவருக்கு, சாதனங்கள் எதுவுமில்லாமல் போர் அடிக்கத்தான் செய்யும்!
ஆரம்பத்திலிருந்தே அபிஷேக் மற்றும் பிரியங்காவிற்கு ஏழாம் பொருத்தமாக இருந்தது. இந்நிலையில், நேற்று பேச்சுவாக்கில் கழிவறை பயன்படுத்தினால் சுத்தமாகப் பயன்படுத்துங்கள் என்கிற அபிஷேக்கின் கவுன்ட்டராகட்டும், 'இந்த பையன் வீடியோ பார்த்ததில்லையா? எல்லாம் வேற மாறி வீடியோ. இங்க கொஞ்சம் சமத்தா இருக்கான். பார்ப்போம் எப்படி இருக்கப்போறான்னு' என்ற பிரியங்காவின் ஸ்டேட்மென்ட்டாகட்டும், 'எங்கேயோ புகையுதே' என்கிற மைண்ட் வாய்ஸ்தான் நமக்கு ஏற்பட்டது. ஒருவேளை, ஏற்கெனவே இருவருக்கும் வாய்க்கால் தகராறு நடந்திருக்குமோ?
'எனக்கே ஆப்பு வெச்சிடுவியோன்னு பயமா இருக்கு' என்று கூறிய பிரியங்காவின் பயத்தில் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது. பின்னே, வெளியே பிக் பாஸ் பற்றி தாறுமாறாக விமர்சித்து விட்டு, உள்ளே சென்று அபிஷேக் அடித்திருக்கும் பல்டி, சாதாரணமானது இல்லையே. உலக மகா நடிப்புடா டெம்ப்லேட் கச்சிதமாகப் பொருந்தும்.
அதிலும், தன்னுடைய யூடியூப் சேனல் விமர்சன வேலையை இங்கும் விடாமல் தொடர்ந்தார் அபி. ஆனால் என்ன, திரைப்படங்களுக்கு பதிலாக அங்கிருக்கும் சக போட்டியாளர்களைப் பற்றி அவர்களிடமே விமர்சித்துக்கொண்டிருந்தார். சுருக்கமாகச் சொல்லப்போனால், வருண், சிபி, அபிநய், நிரூப் ஆகியோர்களிடம் ஜோசியம் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தார். 'நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ. எனக்கு தூக்கம் வருது' என்பதுபோல் அவ்வப்போது சிபி, வரும் மீது சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். எவ்வளவுதான் கத்தி கத்தி கன்டென்ட்டுக்காக அபிஷேக் போராடினாலும், மற்ற போட்டியாளர்களின் முகத்தில் எந்த ரியாக்ஷனுமில்லை. அனைவரின் மைண்ட் வாய்ஸ் மட்டுமே தனி எபிசோடாக போடலாம். அந்த அளவிற்கு மனக்குமுறலில் மற்ற அனைவரும் மூழ்கிருந்தனர். பாவம் அபிஷேக்கின் தந்திரம் இந்த முதல் முயற்சியில் வெற்றிபெறவில்லை.
முதல் முறையாக இம்முறை சிபிதான் கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டார். டாஸ்க் பற்றி சொல்லத்தான். இதுதான் வாய்ப்பு என்று அதனை தன்னுடைய பாணியில் இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அபிஷேக்கும், பிரியங்காவும் தொகுப்பாளர்களாகவே வாழ்கின்றனர். என்னவென்று சொல்வது!
பிறகு, தங்கள் வாழ்க்கைப் பதிவைக் கதை வடிவமாக்கிப் பகிரவேண்டும். அவர்களுடைய கதை பிடித்திருந்தால், மற்ற ஹவுஸ்மேட்ஸ் லைக், ஹார்ட்ஸ் கொடுக்கலாம். பிடிக்கவில்லை என்றால் டிஸ்லைக் கொடுக்கலாம். இதுதான் இவர்களுடைய முதலாவது டாஸ்க். அந்த வரிசையில் இசைவாணி மற்றும் சின்னப்பொண்ணு தங்கள் வாழ்க்கையைக் கதை வடிவமாகப் பதிவு செய்தனர். இப்போதுதான் நம்ம சின்னராசு, அதான் ராஜு என்ட்ரி.
இசைவாணியின் கதைக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் லைக்ஸ், ஹார்ட்ஸ் கொடுத்தனர். லைக்ஸ் கொடுத்த ராஜுவிற்கு இசைவாணி மீது சிறிய வருத்தம். அவருக்குக் கதை பிடித்திருந்தது ஆனால், சொன்ன விதம் பிடிக்கவில்லையாம். அழாமல், போல்டாக சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார். அதுவும் உண்மைதானே! இதனை நேரடியாக இசைவாணியிடமே கூறினார் ராஜு. அதனை அன்போடு ஏற்றும்கொண்டார் இசைவாணி.
ஆனால், சின்னபொண்ணுவின் கதையின் தொகுப்பு பிடிக்காததால், மற்ற ஹவுஸ்மேட்ஸ் லைக்ஸ், ஹார்ட்ஸ் கொடுக்க, ராஜு மட்டும் டிஸ்லைக் கொடுத்தார். அதற்கான காரணத்தையும் விளக்கி, சமரசமாகவே பேசி முடித்தார் ராஜு. சும்மா சொல்லக்கூடாது. விஜய் டிவி ப்ராடக்ட் விஜய் டிவி ப்ராடக்ட்தான்யா! எங்கெங்கு எப்படி எப்படிப் பேசவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர் ராஜு மற்றும் பிரியங்கா.
அதெல்லாம் சரி. இவை ஒருபுறம் இருக்க, தன்னுடைய டாஸ்க்கிற்கான ஒத்திகையை மிகவும் சின்ஸியராகப் பார்த்துக்கொண்டிருந்தார் அபிஷேக். ஆம், ஜோசியம்தான் ஒர்க் அவுட் ஆகல, அடுத்து சென்டிமென்ட்டாக ஏதாவது பேசலாம் என்று நினைத்த அபிஷேக், சின்னபொண்ணுவை பார்த்து அம்மா நியாபகம் வருகிறது என்றுகூறி, தனக்கும் தன்னுடைய அம்மாவிற்கும் இருக்கும் பனிப்போர் பற்றி உருக்கமாகப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், கண்ணீர் வடிக்கவும் செய்தார். எவ்வளவுதான் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவரை தேற்றினாலும், இசைவாணி, இமான் உள்ளிட்டவர்கள் அவரை திசைதிருப்ப முயற்சி செய்தாலும், அபிஷேக் கில்லி போல தன்னுடைய குறியில் ஷார்ப்பாக இருந்தார்.
ஆனாலும், 'செம்மையா பேசுறான்' என்று அக்ஷரா அபியை பார்த்துக் கூறியதுதான் ஹயிலைட். பின்னே, பிக் பாஸ் வரைக்கும் அவரை கொண்டு வந்து சேர்த்தது அவருடைய பேச்சுத் திறமைதானே! இப்போதுவரை அபிஷேக், ராஜு, பிரியங்கா மட்டுமே கன்டென்ட்டுகளை அடுக்கிக்கொண்டிருக்கின்றனர். சென்ற சீசனில் சும்மாவே இருந்து 90 நாட்களைக் கடந்தவர்கள் பட்டியலில் இம்முறை யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் மக்களே?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.