Bigg Boss 5 Tamil Day 51 Review Priyanka Ciby Akshara Abinai Ameer entry : புத்தம் புதிய வைல்ட் கார்ட் என்ட்ரி முதல் அக்ஷரா, ஐக்கி ஹேர்கலரிங் வரை 51-வது நாள் சிறப்பாகவே நகர்ந்தது. அதிலும், கனா காணும் காலங்கள் டாஸ்க் வேறு. பள்ளிப்பருவ நினைவலைகளுக்குக் கூட்டிச் செல்லும் இந்த டாஸ்க்கில் இம்முறை மிகவும் ஸ்ட்ரிக்ட்டான போர்டிங் பள்ளி. அதில், எந்த அளவிற்கு ஒவ்வொருவரும் தங்களின் முழு ஈடுபாட்டை கொடுத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்கலாம். ஆனால், அபிஷேக் மற்றும் ராஜுவின் குரல் அவ்வளவாக ஒலிக்கவே இல்லையே! என்ன காரணமாக இருக்கும்?
முந்தைய நாளில் பிரியங்கா மற்றும் தாமரையின் சண்டையைப் பார்த்து, அவர்களின் உறவில் பிளவு ஏற்பட்டு விட்டதே, இருவரும் மீண்டும் இணைவார்களா அல்லது முறிந்துவிடுமா என்கிற பதற்றத்தில் நம்மை வைத்திருந்தனர். ஆனால், அனைத்தையும் புஷ்வாணம் போல பொசுக்கிவிட்டனர். ஆம், தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் எதுவுமே நடக்காதைப்போல கிச்சனில் பேசிக்கொண்டிருக்க, 'என்ன பழம் விட்டுட்டியா' என்றபடி நிரூப் இடையில் வந்து நம் மைண்ட் வாய்ஸை பிரதிபலித்தார். அதிலும் நிரூப் சொன்ன வார்த்தைகள் பிரியங்காவிற்கு நெருடலை ஏற்படுத்த, இருவருக்கும் மீண்டும் வாக்குவாதங்கள் தொடர்ந்தன. முடிவில்லா வானம் போல நீண்டு கொண்டே போகிறது இவர்களுடைய வாதங்கள். காலையில் அடித்துக்கொள்வதும், மாலையில் சேர்ந்துகொள்வதும் நல்ல விஷயம்தான். ஆனால், இடையில் என்ன நடந்தது என்றுதான் புரியவில்லை பிக் பாஸ்!
ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிய வரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அது நடந்தும்விட்டது. பிரபு தேவாவின் தீவிர ரசிகரான நடன இயக்குநர் அமீரின் என்ட்ரி வேற லெவலில் இருந்தது. இதுவரை இந்த சீசனில் உருப்படியான நடனமோ, அத்தனை பாடகர்கள் இருந்தும் பொழுதுபோக்கும் வகையில் பாடல்களோ என எந்தவிதமான என்டெர்டெயின்மென்ட்டும் இல்லை. அமீரின் என்ட்ரி கொஞ்சமாவது மாற்றத்தைக் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
என்னதான் இருந்தாலும் இம்முறை விஜய் டிவி செல்ல பிள்ளைகள் அதிகம். அமீர் மாஸ்க்கெல்லாம் போட்டு உள்ளே நுழைந்தாலும், அமீர் என மிகச் சரியாக கணித்து கூறினார் பிரியங்கா. இதையடுத்து, லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிப் பருவ டாஸ்க் கொடுக்கப்பட்டது. காலை எழுந்ததுமே 'ஈனா மீனா டீகா..' பாடலுக்குக் குழந்தைகள் போல நடனமாடியவர்கள், பிறகு சிபி ஸ்ட்ரிக்ட்டான வார்டானாகவும், ராஜு, அபிஷேக், அமீர் ஆகியோர் ஆசிரியர்களாகவும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் மாணவர்களாகவும் மாறினர்.
குறும்பு பண்ணும் மாணவர்கள் என்பதனால், அவர்களை அடக்குவதுதான் ஸ்ட்ரிக்ட்டான வார்டன் சிபியின் வேலை. ஆனால், அவருக்கே ஒரு கட்டத்தில் இந்த மாணவர்கள் செய்யும் சேட்டைகளைக் கண்டு சிரிப்புதான் வந்தது. அந்த அளவிற்குக் குறும்புத்தனத்தில் நிஜ மாணவர்களையே மிஞ்சினர். என்னதான் இருந்தாலும், பிரியங்கா செய்தது போல சில விஷயங்கள், இப்படியெல்லாம் கூட செய்யலாமா என்று வெளியே உள்ள மாணவர்களைத் தூண்டிவிடாமல் இருந்தால் சரி.
இதையடுத்து, ஐக்கி மற்றும் அக்ஷராவை தலைமுடிக்குக் கருப்பு நிற டை அடிக்கவேண்டும் என்று கூறியதும், எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் தங்களின் முடி நிறத்தை மாற்றிக்கொண்டது சிறப்பு. அதேபோல வருணும் தன் தாடியை ட்ரிம் செய்துகொண்டார். நல்ல மாணவச்செல்வங்களாக இருக்கின்றனர். ஆனால், தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்துப் படிந்து சீவவேண்டும் என்று கூறியதற்கு, எண்ணெய் தேய்த்ததே இல்லை என்று அடம்பிடித்த அபிநயிக்கு இதன் அடிப்படையில் சிறந்த மாணவன் அவார்டு கொடுத்தார்கள் என்பதுதான் புரியவில்லை.
இவ்வளவு நாளில், நேற்றைய தினம் சற்று விறுவிறுப்பாகவே நகர்ந்தது. என்றாலும், ராஜு மற்றும் அபிஷேக் அமைதியாகவே காணப்பட்டனர். புதிதாக வந்திருக்கும் அமீர் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருவார் என்பதைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர் மக்கள். பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil