Bigg Boss 5 Tamil Kamal Hassan Akshara Varun Eviction Thamarai Tamil News : நேற்று ப்ரோமோ வெளியானதிலிருந்து இரண்டு பேர் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்று தெரிந்ததிலிருந்தே, அக்ஷரா - வருண் பெயர்கள்தான் சமூக வலைத்தளம் முழுக்க பேசும்பொருளாக மாறியது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவரின் நட்பை ரசித்து, பல காணொளிகளைப் பகிர்ந்துவந்த ரசிகர்கள், வீட்டை விட்டு வெளியேறும்போதும் இணைபிரியா நட்பு என்று பெருமைப்பட்டனர். வெளியேற்றத்திலும் அழகாக இவர்களுடைய நட்பு இருந்தது. ஆனால், இவர்களின் வெளியேற்றம் நிச்சயம் தாமரைக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கும். ஏன் அப்படி? அலாசுவோம்...
நேற்றைய எபிசோடின் தொடக்கத்தில் இருவர் இருவராகப் பிரித்து, ஏன் மற்றொருவர் எவிக்ட்டாக வேண்டும், தான் ஏன் காப்பாற்றப்படவேண்டும் என்று கேட்டார் கமல். அவரவர்களின் பார்வையை முன்வைத்து ஆள் ஆளுக்கு ஒவ்வொரு காரணங்களை சொல்ல, பிரியங்கா கூறிய காரணம்தான் கொஞ்சம் இடித்தது. நிறையப் பேரை அவர்களின் வாழக்கையில் தூக்கி விட்டிருப்பதால் தன்னையும் தூக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். நல்ல விஷயம் என்றாலும், செய்த உதவியைக் குறிப்பிட்டுத் திரும்ப செய்யுங்கள் என்று கேட்டிருக்க வேண்டாம் என்றே தோன்றியது.
பிறகு, பாவனி காப்பாற்றப்பட, என்ன ஒரு ஆனந்தம் அவருடைய முகத்தில். இம்முறை இருவர் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் என்பதை அவர்களிடம் மறைத்த கமல், முதலாவதாக அக்ஷராவை வீட்டை விட்டு வெளியேற்றினார் கமல். இதையடுத்து, தாமரை கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குக் கண்ணீர் வடித்தார். என்னதான் ராஜு, சஞ்சீவ் ஆகியோர் நன்றாகப் பேசி பழகினாலும், தாமரைக்கு எப்போதுமே அக்ஷரா மற்றும் வருண் எல்லா நேரங்களிலும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். முக்கியமாக வீட்டில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால், தாமரைக்குத் தோள் கொடுக்கும் தோழர்களாக இவர்கள் இருவர் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் நிச்சயம் அக்ஷராவின் தாமரைக்கு பெரும் இழப்பாகவே இருக்கும்.
கூடவே வருணுடைய வெளியேற்றம் தாமரைக்கு மேலும் வேதனையை அளித்தது. ஆனால், அக்ஷராவும் சரி வருணும் சரி, இந்த வெளியேற்றத்தை நீண்ட நாள் எதிர்பார்த்ததை போலவே இருந்தனர். அதிலும், அக்ஷராவிற்கு 80 நாள்களைக் கடந்ததே பெரிய விஷயமாக இருந்தது. எனினும், ஆரம்பத்திலிருந்து பிரியங்காவிற்கும் அக்ஷராவிற்கும் ஏதோ ஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருந்தது. அதனை, மிகவும் அழகாக சரிசெய்து, தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் நிச்சயம் அக்ஷராவை போல தைரியமாக வளர்ப்பதாகக் கூறியது, உண்மையில் நெகிழ வைத்தது.
ஒருவழியாக வீட்டைவிட்டு வெளியேறி, தான் இத்தனை நாள் கடந்து வந்த நினைவலைகளைப் பார்த்துவிட்டு சக போட்டியாளர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்துவிட்டு வெளியேறினார் அக்ஷரா. அவரைத் தொடர்ந்து வருணும் வாழ்த்துகளைக் கூற, அவர் சார்பாக ஐசரி கணேஷ் மேடையில் என்ட்ரி கொடுத்தார். அவர்களின் சொந்த தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவான 'ஜோஷுவா' பட ட்ரையிலர் வெளியீடு அரங்கேறியது.
இதைப் பற்றி அவ்வளவாகப் பேசாத வருண், மற்ற ஹவுஸ்மேட்ஸ்ஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஐசரி கணேஷின் தயாரிப்பு சார்பாக வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதையும் உறுதி செய்தார். இது நிச்சயம் ராஜு போலத் துடிப்பான இளைஞர்களுக்கான ஊக்கமாக இருந்தது. மொத்தத்தில் நேற்றைய எபிசோட், இருவரை வெளியேற்றினாலும் ஒருவித பாசிட்டிவ் உணர்வையே கொடுத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil