Bigg Boss 5 Tamil Review Priyanka Thamarai Pavani Reddy : இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்தவித ஹெட்போன்களும் இல்லாமல் மக்கள் பார்ப்பது சிறப்பு. இல்லையென்றால் நம் காதுகள்தான் டேமேஜ் ஆகும். அந்த அளவிற்கு நிகழ்ச்சி முழுவதும் வெறும் சத்தம் மட்டுமே இருக்கிறது. எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பது தெளிவாகவும் இல்லை. அவ்வப்போது சண்டையின்போது வெளிப்படும் சில வாக்கியங்கள், வீட்டிற்குள் எப்போது நடைபெற்றது என்ற கேள்வியைத் தருகிறது. ஆக மொத்தத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 5, கடுப்பு.
நாடகம் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு தாமரை நடத்தும் போராட்டம் சலிப்பை ஏற்படுத்துகிறது. எதற்கெடுத்தாலும், குரலை உயர்த்தி பேசுவது அவர் மேல் இருக்கும் மரியாதையை இழக்க வைக்கிறது. கடந்த சீசனில் வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து ஆரி எனும் தனிமனிதனைத் தனிமைப்படுத்தும்போதும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவ்வப்போது பாலாவுடன் சண்டைகள் வந்தாலும், அதனை தன்னால் முடிந்த அளவிற்கு நிதானமாகவே கையாண்டார். இந்த பண்பு அனைவர்க்கும் பிடித்துப்போக, அவருக்கென தனி ஆர்மி உருவானது. ஆனால், இம்முறை அந்த அளவிற்கு யாரும் நம்மை ஈர்க்கவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த சீசனில் யாருக்கும் பொறுமை என்பது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எவ்வளவு கடுப்பேற்றினாலும் ராஜு அமைதியாக இருக்கிறார். ஒரு இடத்தில்படவா வெடித்து சிதற வாய்ப்பிருந்திருக்காது? இருந்தாலும், அவ்வளவு அமைதியாக இருப்பது நல்ல விஷயம் என்றாலும், பார்க்கவே அது போலி என்கிற பிம்பத்தை உருவாக்குகிறது. தற்போது வரை வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் மக்களிடத்தில் இருந்து தனி ஆர்மி வைக்கும் அளவிற்கு சப்போர்ட் இல்லை. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், முடிந்தவரை பாசிட்டிவிட்டியை பரப்பவேண்டும் என்று கமல் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த வீடே சந்தையைவிட மோசமான இரைச்சலோடு இருக்கிறது.
தனக்கு யாருமே சப்போர்ட் செய்யவில்லை, தனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது யாரும் கூட இல்லை, தனக்கு அநீதி ஏற்படும் வேளையில் ஏன் யாரும் முன்வரவில்லை என்று பிரியங்கா கேட்கும் கேள்விகள் என்னவோ சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி என்ன பெரிய அநீதி நடந்தது என்றுதான் விளங்கவில்லை. பாவனியை தாமரைக்குப் பிடிக்காது ஆனால், ஏன் அவ்வளவு நடிக்கிறார் என்று பிரியங்கா ராஜுவிடம் சொன்னது, நமக்கு சிரிப்பையே வரவைத்தது. ராஜூவிற்கே பாவனியைப் பிடிக்காதே, அவரிடமே இப்படிப் புகாரளித்தால் எப்படி பிரியங்கா? மேலும், சுருதி, மதுமிதா வீட்டை விட்டு வெளியேறியதும் இத்தனை நாள்கள் பாவனி தனியாகத்தான் இருந்தார். அப்போதெல்லாம் கண்னுக்கு தெரியாத பாவனி, இப்போது மட்டும் எப்படித் தெரிகிறார்?
மேலும், பாவனி, அபிநய் உறவு பற்றி கிசுகிசுக்காத ஆள்களே உள்ளே இல்லை. அப்படி இருக்கும்போது, இத்தனை நாள் பிரியங்காவும் மற்றவர்களோடு இணைந்து பேசிவிட்டு, இப்போது தன்னை சுற்றி யாருமில்லாத நேரத்தில் தன்னுடன் இருக்கும் பாவனிக்கு ஆதரவாகப் பேசுகிறாரே, இதுமட்டும் சுயநலமாக தெரியவில்லையா அவருக்கு? மற்றவர்களோடு சேர்ந்து பேசுவதும் இதே பப்ளிக் ஃபோரமில்தானே. அது என்ன ராஜு அல்லது மற்றவர்கள் பாவனி - அபிநய் உறவு பற்றிப் பேசினால் மட்டும் இந்த நிகழ்ச்சி திடீரென பப்லிக் இடமாக மாறிவிடுகிறது? இல்ல புரியல!
திடீரென எதற்காகத் தாமரை மீது பிரியங்கா இவ்வளவு கோபப்படுகிறார் என்பதற்கான விஷயமே நேற்றுதான் தெரிந்தது. ஆம், கடந்த இரண்டு வாரமாக பிரியங்காவிற்கு சைவ உணவு சமைத்து தரவில்லையாம். அந்த கோபத்தில்தான் இவ்வளவு கடுப்பாகியிருக்கிறார். என்றாலும், கடந்த வாரம்தான் தாமரை சமைத்த உணவை முழுவதும் சாப்பிட்டுவிட்டு முத்தமிட்டுச் சென்றார்! ஓஹோ.. தனக்கென ஸ்பெஷலாக எதுவும் செய்யவில்லையாம்.. ஏன் தாமரை இப்படி செய்கிறீர்கள்? கொஞ்சம் சமைத்துதான் கொடுங்களேன்!
ஆரம்பக் காலத்திலிருந்து கிச்சனில் அரங்கேறும் ஒரு சண்டை என்றால் அது பாத்ரூம் சண்டைதான். ஆண்களின் எண்ணிக்கை வீட்டில் அதிகமாக இருக்கும்போது, நிச்சயம் கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரத்தானே செய்யும். சுத்தமாக உபயோகிக்கவோ அல்லது க்ளீனிங் டீமை டபுள் மடங்கு சுத்தம் செய்யவோ கேட்டுக்கொள்ளலாம் தவிர, தங்களின் கழிவறையை ஆண்கள் பயன்படுத்தவே கூடாது என்று சொல்வது சரியல்ல. சொன்னால் கேட்டுக்கொள்ளும் பெரியவர்கள்தானே தவிர யாரும் அங்கு சிறிய குழந்தைகள் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்தால் போதும்.
இறுதியாக வீட்டில் இருப்பவர்கள் அதிலும் தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி ஒரு வரியில் எழுதி வைத்திருந்தது, சுவாரசியமாக இருந்தாலும், இதனை ஹவுஸ்மேட்ஸ் எந்த அளவிற்கு சுவாரசியமாகக் கொண்டுபோவார்கள் என்பதில் சந்தேகமே! பாவனிக்கு சப்போர்ட் செய்து சமூக வலைத்தளங்களில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் முழு எபிசோடை இன்றைக்குத்தான் ஒளிபரப்புவோம் என்று கட் செய்துவிட்டார்கள். என்னதான் நடந்தது என்பதை நாளை பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil