Bigg Boss Tamil 3: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து நடிகை மீரா மிதுன் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
எலிமினேஷனைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு, அவர்களை காப்பாற்ற பார்வையாளர்களுக்கு ஓட்டிங் வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி, ரசிகர்கள் யாருக்கு மிக குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ, அவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் உண்மையில் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் ஆள் வெளியேற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் பிக்பாஸ் மேல் மிக பலமாக இருக்கிறது.
இதற்கிடையே, கடந்தவாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. ஆனால் இந்த வாரம் கட்டாயம் அது உண்டு. பாத்திமா, கவின், சேரன், சரவணன், சாக்ஷி, மீரா, மதுமிதா ஆகிய 7 பேரும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த 7 பேரில் பாத்திமா தான் அதிக பிரச்னைகளில் சிக்காமல், தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார். அதனால் பிக்பாஸுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. சண்டை, கோபம், அழுகை என யார் அதிக கண்டெண்ட் கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் பிக்பாஸின் தேவை. அந்த வகையில் பிக்பாஸ் 3-ம் சீசனின் முதல் ஆளாக பாத்திமா வெளியேற்றப்படலாம் என்பது பலரது யூகம்.