/indian-express-tamil/media/media_files/2025/08/09/captain-prapakaran1-2025-08-09-12-15-45.jpg)
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமாக நடிப்பின் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் தான் கேப்டன் விஜயகாந்த். பல நடிகர்களுக்கு 100-வது படம் பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில், கேப்டன் பிரபாகரன் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த விஜயகாந்த், இன்று இல்லை என்றாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் கதைக்களம், காட்சியமைப்பு, அழகான காடுகளின் தோற்றம் என பல காரணங்களை சொன்னாலும் பாடல்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் தான் என்றாரும் கூட அந்த 2 பாடல்களுமே இன்றைக்கும் கேட்டு ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது தான் இளையராஜாவின் இசைக்கு கிடைத்த சிறப்பு.
விஜயகாந்த், ரூபினி, சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், நம்பியார், காந்திமதி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படத்தில், 2 பாடல்களுமே நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆடுவது போல்தான் படமாக்கி இருப்பார்கள். இதில் க்ளைமேக்ஸ்க்கு முன்பு வரும் பாடல் தான் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல். கேப்டன் பிரபாகரன் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வரும் முக்கிய அம்சங்களில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடல் இன்றுவரை நிலைத்திருக்க முக்கிய காரணம் இளையராஜாவின் இசை என்றாலும் மற்றொரு முக்கிய காரணம் இந்த பாடலை பாடிய பாடகி.
இந்த பாடலை பாடியவர் பாடகி சொர்ணலதா. 1987-ம் ஆண்டு, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நீதிக்கு தண்டனை என்ற படம் தான் இவர் பாடகியாக அறிமுகமான முதல் படம். இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலை பாடகர் கே.ஜே.யேசுதாஸூடன் இணைந்து சொர்ணலதா பாடியிருந்தார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்துது. அதன்பிறகு ரஜினியின் குரு சிஷ்யன், விஜயகாந்தின் சத்ரியன் உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சொர்ணலதா, கடைசியாக, கௌரி கல்யாண வைபோகமே என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். அவர் இறந்த பிறகுதான் இந்த படம் வெளியானது. தமிழ் மட்டும் இல்லாமல், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடியுள்ள சொர்ணலதா, சீரியலிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சொர்ணலதா, கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 12 தேதி தனது 37 வயதில் மரணமடைந்தார். இப்போது இவர் இல்லை என்றாலும், அவரது பாடல் நம்மில் பலரின் மனதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.