விஜய் நடித்துள்ள மெர்சல் படம் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்து, மெர்சல் படத்தின் தலைப்பை படக்குழு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள 'மெர்சல்' படம், தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், 2014 -ஆம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் 'மெர்சல் ஆயிட்டேன்' என்ற தலைப்பை பதிவு செய்துள்ளதால், 'மெர்சல்' படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இதனால், மெர்சல் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் தடை நீங்கும் வரை படம் குறித்து விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 4-ஆம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது இரு தரப்பு சார்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை இன்று(வெள்ளி) நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதுவரை மெர்சல் படம் தொடர்பாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், படத்தின் மீதான இடைக்காலத் தடையையும் நீக்கி உத்தரவிட்டது. மேலும், மெர்சல் என்ற தலைப்பை படத்திற்கு பயன்படுத்தலாம் என்றும், விளம்பரம் செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.