‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, முதன்முறையாக தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 100 நாட்களுக்கு ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி, கடந்த மாதம் 30ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ, அனுயா, ஆர்த்தி, நமிதா, ஆரவ், ஓவியா, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, பரணி, ஷக்தி, கஞ்ச கருப்பு, காயத்ரி ரகுராம், ரைஸா, ஜூலி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா வருணி, காஜல் ஆகியோர் ஒவ்வொருவராக சேர்க்கப்பட்டனர். இதில், ஜூலியைத் தவிர எல்லாருமே சினிமா பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரவ் வெற்றிபெற்ற இந்தப் போட்டியில், சினேகன் இரண்டாவதாகவும், ஹரிஷ் கல்யாண் மூன்றாவதாகவும், கணேஷ் வெங்கட்ராம் நான்காவதாகவும் வந்தனர். அத்துடன், இதில் கலந்துகொண்ட அனைவருக்குமே மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைத்தது. சிலருக்கு எதிர்மறையான பப்ளிசிட்டி கிடைத்தாலும், அதியும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டனர். ஆனால், நமிதா மட்டும் பிக் பாஸ் மீது கோபத்தில் இருக்கிறாராம். அதனால்தான், ‘பிக் பாஸ்’ ஃபைனலில் கலந்து கொள்ளாதவர், இன்று ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
நமிதாவுக்கு ‘பிக் பாஸ்’ மீது அப்படியென்ன கோபம்?
தன்னைத் தவறாகச் சித்தரித்துக் காட்டிவிட்டதாக நினைக்கிறாராம் நமிதா. தன்னை ஒரு வில்லி போலக் காட்டியது, நமிதாவுக்கு அறவே பிடிக்கவில்லையாம். சூழ்நிலையால் தான் கோபமாக நடந்துகொண்ட விஷயங்களை மட்டுமே போட்டுக்காட்டி, மக்களுக்கு தன்னைப் பற்றி தவறான அபிப்ராயம் ஏற்படுத்தி விட்டதாக நினைக்கிறாராம். தான் நல்லவிதமாக நடந்துகொண்ட எத்தனையோ விஷயங்களில், ஒரு விஷயத்தைக் கூட பிக் பாஸில் காட்டவில்லை என்பது அவருடைய எண்ணம்.
நமிதாவின் குணம் பற்றி அவர்களுடன் நெருங்கியப் பழகிய எல்லோருக்குமே தெரியும். அனைவருக்கும் மரியாதை கொடுத்து இனிமையாகப் பழகுபவர். அப்படியிருக்க, நமிதாவுக்கு நெருங்கியவர்களே ‘பிக் பாஸ்’ பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ‘நீயா இப்படி நடந்துகிட்ட?’ என்று நமிதா வெளியில் வந்தபிறகு கேட்டிருக்கிறார்கள். குழப்பமான நமிதா நிகழ்ச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதனால் தான், அதன்பிறகு ‘பிக் பாஸ்’ சம்பந்தமான எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.