Vadivelu in trouble again : நகைச்சுவை நடிகர் வடிவேலு, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காததால் பல பிரச்னைகளை எதிர் கொண்டார். இதற்கிடையே ’கத்தி சண்டை’ மற்றும் ’மெர்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் அவற்றில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வடிவேலுவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் ’தேவர் மகன்’ படத்தின் இசக்கி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே தற்போது மற்றொரு சிக்கலில் மாட்டியுள்ளார் வடிவேலு. தொழிலதிபரும் நடிகருமான ஆர்.கே நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
’நானும் நீயும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒத்துழைக்காமல், படப்பிடிப்பை தாமதப்படுத்தினார். ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடித்துக் கொள்ளட்டும், ஆனால் 1 கோடி ரூபாயைத் திருப்பித் தராமல் திரைப்படத்தை வெளியிட முடியாது’ என ஆர்.கே தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.