இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளுமான சௌந்தர்யாவிற்கும், அவரது கணவர் அஷ்வினுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதனால், அவர்களுடைய 7 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும், தொழிலதிபரான அஷ்வின் என்பவருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சௌந்தர்யா, “தன்னை சௌந்தர்யா ரஜினிகாந்த் என அழைப்பதிலேயே பெருமை கொள்கிறேன்”, என கூறி வந்ததையடுத்து, இருவரும் விவாகரத்து பெறபோவதாக தகவல் கசிந்தது. ஆனால், ஆரம்பத்தில் இருவருமே அச்செய்தியை மறுத்தனர்.
ஆனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, அவர்களிடையேயான பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவீட்டு பெரியவர்கள் சமாதானம் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும், சொத்து மற்றும் குழந்தை குறித்தும் தாங்கள் சமாதானமாக பேசி முடிவெடுத்துவிட்டதாகவும், அவர்களுடைய மனுவில் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கு, கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி மரியா கிளட்டா முன்பு இருவரும் நேரில் ஆஜராகி பரஸ்பரம் பிரிய சம்மதம் தெரிவித்தனர். அப்போது வழக்கை ஜூலை 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி மரியா கிளட்டா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சௌந்தர்யா மற்றும் அஷ்வினுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.
தற்போது அவர்களுடைய 4 வயது குழந்தை சௌந்தர்யாவின் அரவணைப்பில் உள்ளது. இருப்பினும், குழந்தை மீதான உரிமை, சொத்து குறித்தான இருவருடைய முடிவுகள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை.
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட சௌந்தர்யா, முதல் படத்திலேயே தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் எனும் படத்தை இயக்கினார். சொந்த பிரச்சனைகளை முன்னிறுத்தாமல், தனது வேலைகளில் எப்போதும் ‘பிஸியாகவே’ சௌந்தர்யா இருந்துவருகிறார். குடும்ப பிரச்சனைகளிடையேயும், சௌந்தர்யா தன்னுடைய 2-வது திரைப்படமான வி.ஐ.பி.-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார். இந்த படம் வரும் 28-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படத்தில், நடிகர் தனுஷ், நடிகைகள் கஜோல், அமலா பால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.