தனுஷ் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் இன்று தொடங்கியது.
கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘அச்சம் என்பது மடமையடா’. சிம்பு, மஞ்சிமா மோகன் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்கும் முட்டிக் கொண்டது.
உடனே, அந்தப் படத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு, தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்க ஆரம்பித்தார் கெளதம் மேனன். மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியாக நடித்தார். அதற்குள் சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்குமான மோதல் முடிவுக்கு வர, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை முடித்து, ரிலீஸும் செய்துவிட்டார்.
இந்நிலையில், கெளதம் மேனனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்னை தொடங்கியது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தர்புகா சிவாவை இசையமைக்க வைத்ததில் கடுப்பானார் தனுஷ். அத்துடன், தனுஷுக்கு சம்பளமும் கரெக்டாக தராததால், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ துப்பாக்கியில் இருந்து புறப்படாமலேயே நின்று போனது.
சும்மா இருப்பாரா கெளதம் மேனன்? விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கினார். வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை நிறுத்தி வைத்துவிட்டு, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைக் கையிலெடுத்துள்ளார் கெளதம் மேனன்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை ஓஎம்ஆரில் இன்று தொடங்கியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ‘வடசென்னை’ படத்திற்காக பெரிய தாடி வைத்திருந்தார் தனுஷ். துபாயில் நடைபெற்ற ரஜினியின் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அந்த கெட்டப்பில் கலந்து கொண்டார். ஆனால், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் இளைஞனாக, தாடி - மீசை இல்லாமல் நடிக்கிறார். அதனால்தான், சமீபத்தில் நடைபெற்ற சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தாடி - மீசை இல்லாமல் கலந்து கொண்டார்.
ஆக, முதலில் ரிலீஸாவது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வா அல்லது ‘துருவ நட்சத்திரம்’ படமா என்பதை கெளதம் மேனன் தான் சொல்ல வேண்டும்.