தனுஷ், சாய் பல்லவி நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் நாளை தொடங்குகிறது.
தனுஷ் நடிப்பில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி ரிலீஸான படம் ‘மாரி’. பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்தில், காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்தார். மேலும், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ், காளி வெங்கட், மைம் கோபி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருந்தார்.
‘மாரி’ படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ராதிகா சரத்குமாரின் ‘மேஜிம் ஃபிரேம்ஸ்’ இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்தன. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருந்தன. படத்தில் இடம்பெற்ற ‘செஞ்சிருவேன்...’ டயலாக், குழந்தைகள் வரை பிரபலமடைந்தது. அத்துடன், தனுஷின் தாடி - மீசை ஸ்டைலை நிறைய இளைஞர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர்.
எனவே, ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தன. பாலாஜி மோகன் இயக்க, சாய் பல்லவி தனுஷ் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ரோபோ சங்கரும் இரண்டாம் பாகத்தில் தொடர்கிறார். தற்போது தனுஷும், அனிருத்தும் பேசிக் கொள்வதில்லை என்பதால், இந்தப் படத்துக்கு யார் இசையமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ மற்றும் கெளதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் தனுஷ். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல், இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில், ‘மாரி 2’ படத்தின் ஷூட்டிங், நாளை பூஜையுடன் தொடங்க இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்காக தாடி - மீசையை மழித்து சின்னப்பையன் கெட்டப்பில் இருக்கிறார் தனுஷ். ‘மாரி’யின் ஸ்பெஷலே அந்த மீசை - தாடி தானே... அப்புறம் எப்படி? தனுஷ் இல்லாத காட்சிகளை முதலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பாலாஜி மோகன். அதற்குள் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வும் முடிந்துவிடும். எனவே, அதன்பிறகு தனுஷ் சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.