/indian-express-tamil/media/media_files/2025/10/16/mariselvaraj-2025-10-16-11-42-57.jpg)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ என பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். தற்போது ‘பைசன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கையைத் தழுவி ’பைசன்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட விழாவில், ’பைசன்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தது மனத்தி கணேசன் தான். என்னுடைய ஹீரோவாக இருந்த இவரைத்தான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தேன். கபடி விளையாட்டுக்காக, இவருக்காக சிறுவயதில் நான் போஸ்டர் ஒட்டியிருக்கிறேன்.
அவரின் கதையை வைத்து படம் எடுக்கப்போகிறேன் என அனுமதி கேட்டதும், என்னை நம்பி எனக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் கணேசன். நேர்மையான உழைப்புடன் பல போராட்டங்களைத் தாண்டி முன்னேறி வந்த இளைஞர்களின் கதையை எனது அரசியல் பார்வையில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். ‘பைசன்’ திரைப்படத்தை பார்த்து இயக்குநர் ராம், மனத்தி கணேசன், பா.இரஞ்சித் ஆகியோர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், ‘பைசன்’ திரைப்படத்தின் தலைப்பிற்காக இயக்குநர் மாரிசெல்வராஜ் மன்னிப்பு கேட்டார். செய்தியாளர்களிம் பேசிய அவர், பைசன் என படத்துக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டை தாண்டி படத்தை கொண்டு செல்வதற்கு பொதுவான டைட்டில் வைக்குமாறு கூறியது. இதன் காரணமாகவே பைசன் என தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார். இருந்தாலும், தனது திரைக்கதை புத்தகத்தில் 'காளமாடன்' என்றுதான் தற்போது வரை இருப்பதாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்திற்கும் தமிழில் தான் தலைப்புகள் இருந்தனர். ஆனால், தற்போது வெளியாகவுள்ள ‘பைசன்’ திரைப்படத்திற்கு மட்டும் ஆங்கிலத்தில் தலைப்பு இருந்தது. இதுகுறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது மாரிசெல்வராஜ் அந்த கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் கொடுப்பதுபோல் பதிலளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.