/indian-express-tamil/media/media_files/2025/10/30/dm-2025-10-30-12-06-46.jpg)
தமிழ் சினிமா வரலாற்றில் தனது வசீகர குரலால் ரசிகர்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டிருந்த ஒரு பாடகர் என்ற பெருமை பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை தான் சேரும். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் செளந்தரராஜன் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த காரைக்குடி ராஜாமணி ஐங்காரிடம் இசை பயிற்சி பெற்றவர்.
இவர் முதலில் மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். கச்சேரிகளில் தனது தனித்துவமான குரல் வளத்தால் மக்களைக் கவர்ந்து வந்த டி.எம்.சௌந்தரராஜனுக்கு, 1950-ஆம் ஆண்டு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ’கிருஷ்ணவிஜயம்’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘ராதே என்னை விட்டுப் போகாதடி’ என்ற பாடலின் மூலம் டி.எம்.எஸ் முதன் முதலில் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ’மந்திர குமாரி’, ’தேவகி’, ’சர்வாதிகாரி’ போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக அவருக்கு பாடல் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
டி.எம்.எஸ் பாடல்கள் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். 1960-ல் வெளியான ’பட்டினத்தார்’, ’அருணகிரி நாதர்’ போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் ’அருணகிரி நாதர்’ திரைப்படத்தில் இவர் பாடிய, ”முத்தைத்தரு பக்தித் திருநகை” பாடல் இன்றைய தலைமுறையினர் வரை சிறந்த பாடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றும் எல்லா இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கிறது. இப்படி தன் குரல் வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டு பிரபலமடைந்த பாடகர் டி.எம்.எஸ், சில சமயங்களில் பாடல்களில் சில வித்தைகளையும் காட்டுவார்.
அப்படி ’திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ பாடலில் டி.எம்.எஸ் செய்த ட்ரிக் குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு டி.எம்.எஸ்-ஸின் நெருங்கிய நண்பர், பத்திரிகையாளர் ரவி பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, “பாட்டும் நானே பாவம் நானே பாடல் கடவுள், விறகு வெட்டி அவதாரம் எடுத்து பாடும் பாடல். ஒரு திறந்த வெளியில் நடக்கும் காட்சி என்று படக்குழுவினர் விவரித்தனர். அப்போது டி.எம்.எஸ் இது ஏன் நேரடியாக பாட வேண்டும் திறந்தவெளியில் படுத்திருக்கிறான். ஒரு கொசு கடிக்கிறது அதை அடிப்பது போன்று எடுத்து கர்நாடக மியூசிக்கில் போகலாம் என்று பாடி காட்டினார். அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது. சிவாஜி உட்பட அனைவரும் அந்த பாடலை ரசித்தனர்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us
 Follow Us