துல்கர் சல்மான் நடித்துவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல், சென்னையில் இன்று தொடங்கியது.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகர் மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மான், பாலாஜி மோகன் இயக்கிய ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’ மற்றும் ‘சோலோ’ படங்களில் நடித்தார்.
தமிழக அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியால் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ‘சோலோ’ படம் பெரிதாகப் போகவில்லை. இதனால் மன வருத்தம் அடைந்தாலும், தமிழிலும் எப்படியாவது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடிக்க ஆசைப்படுகிறார் துல்கர் சல்மான்.
தமிழில் நான்காவது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப் படத்துக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் வைரமுத்து.
கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் ரிது வர்மா, இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 54 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.