துபாயில் நடைபெற்ற எந்திரன் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன.
ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் எந்திரன் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதற்காக, ரஜினிகாந்த், இயக்குநர் சங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை எமி ஜாக்சன், நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் வியாழக்கிழமையே துபாய் சென்றனர். அன்றைய தினம், படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தினர்.
அதில் பேசிய ரஜினி, “நிஜ வாழ்வில் பணம் தரமாட்டார்கள் என்பதால் நான் நடிப்பதில்லை”, என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நடிகர் ராணா, பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அத்திரைப்படத்தின் 2 பாடல்களும் வெளியிடப்பட்டன.
இரண்டு பாடல்களும் ரஜினி ரசிகர்களிடையே ஹிட்டாகியுள்ளது. அதில், ‘எந்திர லோகத்து சுந்தரியே’ என துவங்கும் பாடல், இரு ரோபோட்டுகள் உரையாடல்போன்று அமைந்துள்ளது. எந்திரன் ஒன்றாம் பாகத்தில் இடம்பெற்ற ‘இரும்பிலே ஒரு இதயம்’ பாடலை எழுதிய மதன் கார்க்கி வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். பாடகர்கள் சித் ஸ்ரீராரம் மற்றும் ஷாஷா திருப்பதி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
இரண்டாவது பாடல், ‘ராஜாளி நீ காலி’ பாடலையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பாடகர்கள் சித் ஸ்ரீராம், ப்ளேஸ், அர்ஜூன் சண்டி ஆகியோர் பாடியுள்ளனர்.
இருபாடல்களும் அறிவியல் குறித்தும், ரோபோக்கள் குறித்த வரிகளையே கொண்டுள்ளது. இரு பாடல்களும் ஒரே மாதிரி தோன்றுவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.