‘காலா’ தெலுங்கு படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. இரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஹீமா குரேஷி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை முடித்த பின்பு நேற்று இரவு சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காலா திரைப்படத்திற்கு எழும் எதிர்ப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “காலா படத்திற்கு இன்னும் அதிகமான எதிர்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் குறைவாகத்தான் உள்ளது.” என்று கூறினார்.
மேலும் கர்நாடகத்தில் கால திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், தூத்துக்குடி பயணம் ‘காலா’ படத்திற்காக இல்லை, எனது இத்தனை வருடங்களில் இது போன்ற ஸ்டண்ட் செய்து தான் படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
இதற்கிடையில் தற்போது ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் ‘காலா’ திரைப்படத்தின் தடையை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் இணைந்து வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.