கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். அதற்கான நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் தொடங்கியுள்ளது. கரூர், திண்டுக்கல், குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 600 ரசிகர்களை சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார். அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து மாவட்ட ரசிகர்களையும் சந்தித்து, ரஜினி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார்.
நான் அரசியலுக்கு வந்தால்......
ரசிகர்கள் முன்பு ரஜினிகாந்த் பேசிய போது, "முதலில் என்னுடைய பட ஷூட்டிங்கிற்கு லேட்டாக தான் வருவேன். ஆனால், இயக்குனர் எஸ்பி முத்துராமன் என்னை கூப்பிட்டு 'இனி நீதான் முதல் ஆளாய் ஷூட்டிங்கிற்கு வரவேண்டும்' என்றார். அன்றுமுதல் எப்போதும் ஷூட்டிங்கிற்கு நான் தான் முதல் ஆளாய் இருப்பேன். எஸ்பி முத்துராமனிடம் இருந்துதான் ஒழுக்கத்தை நான் கற்றுக் கொண்டேன்.
10,12 வருஷத்திற்கு அப்புறம் உங்களை சந்திக்கிறேன். 'எந்திரன்' நல்லாப் போச்சு.. ஆனா, என்ன காரணம்-னு தெரியல, அவங்க வெற்றிவிழா வைக்கல. அதற்கப்புறம் 'கோச்சடையான்' சரியாப் போகல. 'கபாலி' நல்லாப் போனாலும், சில காரணங்களால் அப்படத்திற்கு வெற்றிவிழா கொண்டாட முடியவில்லை. அதற்கப்புறம் இப்போதுதான் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
என்னுடைய பட ஆதாயத்திற்காக தான் நான் ரசிகர்களை சந்திப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், இதுபோன்ற செய்திகளை எனது ரசிகர்கள் நம்பமாட்டார்கள். மக்கள் நம்பமாட்டார்கள். பேசுபவர்கள், பேசிக் கொண்டே இருக்கட்டும். இதுவரை ஒவ்வொரு முடிவையும் மிகவும் யோசித்தே எடுத்திருக்கிறேன். கடவுள் தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்னர், சூழ்நிலை காரணமாக ஒரு கட்சிக்கு எனது ஆதரவைத் தெரிவித்தேன். கடவுளின் அருளால், என் ரசிகர்களாகிய நீங்கள் அவர்களை வெற்றிப் பெற வைத்தீர்கள். இதற்குபின் தான், ஒவ்வொரு முறையும் என்னையும் அரசியலையும் தொடர்புப்படுத்தி அதிகம் பேச ஆரம்பித்தார்கள். சில ரசிகர்கள், எனது பெயரைப் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வேலை செய்தார்கள். அந்த சில ரசிகர்கள் அதில் காசும் பார்த்துவிட்டார்கள். அந்தப் பூனை அதில் ருசி கண்டுவிட்டது. அதற்குப்பின் தேர்தல் நேரங்களில், அந்த ரசிகர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டனர். அந்த ரசிகர்களும், அரசியல்வாதிகளை பயன்படுத்திக் கொண்டனர்.
இப்போது சொல்கிறேன், ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், இவர்களையெல்லாம் என் அருகில் கூட சேர்க்கமாட்டேன். உள்ளேயே விட மாட்டேன். அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால், இப்போதே அழித்துவிடுங்கள். அரசியல் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பதை ஏற்கமுடியாது.
இப்போது ஆண்டவன் என்னை ஒரு நடிகனாக இயக்கிக் கொண்டிருக்கிறேன். நாளை என்னை என்னவாக இயக்கப்போகிறான் என்பதும் அவனுக்கு தான் தெரியும். ஆனால், எனக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்வேன்.
அதேபோல், இந்த சிகரெட், மது பழக்கத்தை விட்டுவிடுங்கள். ஒரேடியாக விட்டுவிட நீங்கள்
முனிவரோ, சித்தரே கிடையாது. முடிந்தளவு விட்டுடுங்க" என்று ரஜினிகாந்த் பேசினார்.