திரையரங்குகளுக்கு தமிழக அரசு இரட்டை வரிவிதிப்பு செய்துள்ளதால், அதனை எதிர்த்து இன்று முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் காலவரையின்றி வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. இதனால் கடந்த வாரம் வெளியான ஸ்பைடர், கருப்பன் உள்பட பல படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி 28% வரிவிதிக்கப்பட்டுள்ளதால் சினிமா கட்டணங்கள் ரூ.150க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 30 சதவிகதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மற்ற மொழி புதிய திரைப்படங்களுக்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. அதேபோல, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களுக்கு 7 சதவிகிதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 14 சதவிகிதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.
அரசு தரப்பில் கேளிக்கை வரி குறைக்கப்பட்டது. இருப்பினும், தமிழக அரசின் இந்த புதிய வரி விதிப்பால், தியேட்டர்களில் டிக்கெட் மேலும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரியுடன் இந்த புதிய கேளிக்கை வரியும் கட்ட வேண்டிய நிலை இருப்பதால், இந்த இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தன.
அதன்படி, ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் ஆகிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
பிவிஆர் வெப்சைட்டில் டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகவும் டிக்கெட்டுகள் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இதனால், ஒவ்வொரு தியேட்டரிலும் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வசூல் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.