நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகல்வால், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளிவரவுள்ளது. இந்த நிலையில், ஏ.ஆர் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேணான்டாள பிலிம்ஸ் நிறுவனமானது மெர்சல் என்கிற தலைப்பில் நடிகர் விஜயை வைத்து திரைப்படம் எடுத்து வருகிறது. ஆனால், நாங்கள் மெர்சல் படத்திற்கு முன்னதாகவே, மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து, கடந்த 2014-ம் ஆண்டு முதல் படத்திற்கான பணி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சல் மற்றும் மெர்சலாயிட்டேன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே அர்த்தத்தை கொண்டவை. மெர்சல் படத்திற்கு முன்னதாகவே மெர்சலாயிட்டேன் என்ற படத்தை பதிவு செய்துவிட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் நடவடிக்கையில்லை. மெர்சல் என்கிற தலைப்பில் விஜயின் படத்தை வெளியிட்டால், எங்கள் நிறுவனத்திற்கு இழப்பீடு ஏற்படும். ஆகவே, மெர்சல் என்ற தலைப்பில் விஜயின் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு வெள்ளிக்கிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆசுஜரான வழக்கறிஞர், மெர்சல் என்கிற படத்தை முன்பாகவே தயாரித்து விட்டோம். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், படத்தை நிறுத்தினால் பெரும் இழப்பு ஏற்படும். எனவே, படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மெர்சல் என்கிற தலைப்பை பயன்படுத்தி, படத்தின் தயாரிப்பு, வெளியீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்தார். இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.