அசாமைச் சேர்ந்த நடிகை மற்றும் பாடகி பிதிஷா பெஸ்பரா, நேற்று (செவ்வாய்) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியான 'ஜக்கா ஜசூஸ்' படத்தில் பிதிஷா நடித்திருந்தார். 30 வயதான பிதிஷா நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலம் ஆனவர். இந்த நிலையில், குர்கானில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிதிஷாவின் குடும்பம் அவரது கணவர் நிஷீத் ஜா மீது குற்றம் சாட்டியுள்ளது. நிஷீத் ஜா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பியதாகவும், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த பிரச்சனையால் தான் பிதிஷா மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறினர். இதனால், நிஷீத் ஜாவை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் தீபக் சாஹரன் கூறுகையில், "பிதிஷாவின் தந்தை கடந்த திங்கட்கிழமை முதல் அவருக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், பிதிஷா போனை எடுக்காததால், அவரது தந்தை காவல் நிலையத்தில் தகவல் அளித்தார்.
இதையடுத்து, காவல்துறை உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தது. அங்கு சென்று பார்த்த போது, வீட்டின் மெயின் கேட்டும், கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், போலீஸ் குழு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்ற பார்த்தனர். அப்போது ஃபேனில் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் இருந்தார் பிதிஷா.
மேலும், பிதிஷாவின் தந்தை எங்களிடம் அளித்துள்ள புகாரில், தங்கள் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார் என்றும், அன்று முதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எப்போது பார்த்தாலும் சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இந்த புகாரையடுத்து, பிதிஷாவின் மொபைல் போன், ஃபேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை விசாரணைக்குழு ஆய்வு செய்து வருகிறது.
ஆனால், தற்கொலை குறித்து, பிதிஷா கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை" என்று துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.