Prashanth-Sanchita Starrer Johnny Review in Tamil : பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்தப் பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.
இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.
பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். அந்த திருட்டு சம்பவத்தின்போது ஆத்மாவை மயக்கமடையச் செய்து பணத்தை திருட முயற்சிக்கிறார் பிரசாந்த். ஆனால் மயங்கி கீழே விழும்போது ஆத்மா தலையில் பயங்கரமாக அடிப்படுகிறது. இதனால் இரயில் உள்ளேயே இறந்து விடுகிறார். அவரின் சடலத்தை ரயிலின் வெளியே தூக்கி வீசிவிட்டு பதற்றத்துடன் பணப்பெட்டியை எடுத்து வருகிறார் பிரசாந்த்.
பணத்தை திருடியது தாம் தான் என்று யாருக்கும் தெரியக் கூடாது என பிரசாந்த் முட்டுக்கொடுத்தாலும், ஒரு கட்டத்தில் பிரபு இதனை தெரிந்துக் கொள்கிறார். எப்படி தெரிந்துக் கொண்டார் என்று தியேட்டரில் பொதுமக்கள் வியப்படையவே வேண்டாம். ஏனென்றால் பிரசாந்த் உதிர்க்கும் சில வார்த்தைகளே போதும், ‘ஆஹா பிரபு கண்டு பிடிச்சுட்டார்’ என்று நாம் தெரிந்துக் கொள்ள முடியும்.
சரி இது தான் இப்படி ஆனது, அடுத்து இருக்கும் இரண்டு பேரிடம் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறார் என்று பார்க்கலாம் என பொறுமையோடு பார்க்கத் தொடங்கினால், நேரம் கடந்து செல்ல கடந்து செல்ல, பொறுமையே போகிறது.
இவர்கள் நடத்தும் கிளப்பிற்கு சூதாட ஒரு பணக்கார பார்ட்டி வருகிறது. அந்த பார்ட்டியிடம் முக்கிய குறிப்பு ஒன்று சிக்குகிறது. இது பற்றி அவர்கள் ஆனந்த் ராஜிடம் கேட்க அந்த நொடி அவருக்குள் சிந்தனை எழுகிறது. ஆனந்த் ராஜ் கண்டுபிடிப்பாரா? காதலியுடன் வெளிநாட்டிற்கு பிரசாந்த் தப்பிச் செல்வாரா என்ற முடிவு தான் ஜானி.
பிரசாந்த்தின் கம் பேக் படமாக இது அமைந்திருந்தாலும், முன்பிருந்த அளவிற்கு அவரின் நடிப்பு நம்மை வெகுவாக கவரவில்லை. படத்தின் பெரும்பாலான பகுதிகள் இழுபறியாக இருக்கிறது. அதையும் மீறி சுவாரசியமான காட்சிகள் வரும் இடங்களில் எல்லாம் என்ன நடக்கும் என்பது முன்பே கணிக்க முடிகிறது. ஆனால் இறுதி வரை தன் காதலி சஞ்சிதாவிற்கு இவர் பணம் ஆட்டைப் போட்டதை தெரியாமலேயே காப்பாற்றுகிறார். கூட இருந்த பார்ட்னர்களுக்கும் விஸ்வாசமாக இல்லை, காதலிக்கும் விஸ்வாசமாக இல்லை சக்தி (எ) ஜானி (பிரசாந்த்).