Khushbu Sundar on Twitter: ட்விட்டரில் அவசரப்பட்டு ஒரு கருத்தை பதிவிட்டு, பிறகு அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை குஷ்பூ.
நடிகையும் அரசியல்வாதியுமான அவர் தனது தோழி சுஜாதா விஜயக்குமாருடன் லண்டனில் விடுமுறையில் உள்ளார். அங்கு ஷாப்பிங் செய்யும் போது, ஒரு மொபைல் கடையில், ஃபோனின் பேக் கவர் ஒன்றைக் கண்டிருக்கிறார் குஷ்பூ. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போலவே தோற்றமளிக்கும் படம் இருந்திருக்கிறது.
அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த குஷ்பூ, ”லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் உள்ள ஒரு கிஃப்ட் ஷாப்பில் நான் கண்டதைப் பாருங்கள் ... !!! அவர் வெரி ஓன் சூப்பர் ஸ்டார்” எனக் குறிப்பிட்டிருந்த அவர், ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவையும் அதில் டேக் செய்திருந்தார்.
பின்னர் அந்த நபர், கத்தாரின் மன்னன் தமிம் பின் அகமது என்பது தெரிய வந்தது. குஷ்புவின் தவறை பலரும் சுட்டிக் காட்டிய பிறகு, ”எனது தவறை திருத்தியதற்கு நன்றி. ஃப்ளிப் ஹேருடன் இருப்பவர் எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தான். அதோடு அந்தக் கடையில் இருந்த நபரும் அப்படித்தான் தெரிவித்தார். சரி... அது நம்முடைய சூப்பர் ஸ்டார் இல்லை. என் தவறை திருத்திய எனது நல்ல நண்பர்களுக்கு நன்றி. தவறை ஏற்றுக்கொள்வது நீங்கள் வளரத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது, நானும் அப்படித்தான்.. தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுதல், மனிதநேயம்” என தன் தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தார் குஷ்பூ.