சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்த அமலா பால் மீது வழக்குப் பதிவுசெய்ய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை வாங்கினார் அமலா பால். ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்புடையது இந்தக் கார். கேரளாவைச் சேர்ந்த அமலா பால், அங்கு காரைப் பதிவு செய்தால் 20 லட்ச ரூபாயை வரியாகக் கட்ட வேண்டும். எனவே, புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். அங்கு பதிவுசெய்ய ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. ஆனால், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும்.
அமலா பாலின் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெரேசா தெருவைச் சேர்ந்த ஒரு இளைஞரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஞ்ஜினீயரிங் படித்துவரும் அந்த இளைஞருக்குத் தெரியாமல் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் கொடுமையான விஷயம். அமலா பாலின் இந்த செய்கையால், கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்த அமலா பால் மீது வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகை அமலா பால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவுசெய்ய முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அமலா பால் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததைப்போல் வேறு யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று விசாரணை நடத்துமாறு புதுச்சேரி போக்குவரத்துத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். 15 நாட்களுக்குள் அவர் விசாரணை நடத்துவார்” என தெரிவித்துள்ளார்.