‘தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ‘தமிழ்ப்படம் 2’ படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாகவும், திஷா பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். மேலும், பரவை முனியம்மா, எம்.எஸ்.பாஸ்கர், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, மனோபாலா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முழுக்க முழுக்க காமெடிப்படமாக அமைந்த இதுதான், சி.எஸ்.அமுதனுக்கு முதல் படம். எனவே, அவருடைய அடுத்த படத்துக்கு ‘ரெண்டாவது படம்’ என்றே வித்தியாசமாக தலைப்பு வைத்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி, சஞ்சனா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால், பல வருடங்களாகியும் இன்னும் இந்தப் படம் ரிலீஸாகவில்லை.
எனவே, ‘தமிழ்ப்படம்’ பார்ட் 2 எடுக்கப் போகிறார் சி.எஸ்.அமுதன். ‘மிர்ச்சி’ சிவாவே ஹீரோவாக நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வருகிற 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சஷிகாந்த், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படம், மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. அதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தியேட்டர் ரிலீஸ் தேதி 25-5-2018 என்றும், தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் தேதி 26-5-2018 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மறுநாளே தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகிவிடும் என்பதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இயக்குநர் பாலாஜி மோகன், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன், “நல்லவேளை, நான் இன்னும் போலீஸ் படம் எடுக்கவில்லை. இரண்டாவது நாள் தமிழ் ராக்கர்ஸில் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
,