நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திலிப் அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும், பாவனாவின் வீடியோவை, நடிகர் திலிப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சன் சுனி முன்னதாக கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவ்யா மாதவனின் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர்.
நடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து, திலீப்புக்கும், பல்சர் சுனிக்கும் இடையேயான தொடர்பு இருப்பது அம்பலமானது.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவானார்கள். இந்நிலையில், நடிகர் திலீப்பிடம் இன்று காலை முதல் கேரள போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாவனாவின் திருமணத்தை தடுக்கவே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திலீப்பிடம் விசாரணை நடத்தும்பட்சத்தில் உண்மை விவகாரம் வெளிச்சத்திற்கு வரும்.
குற்றம் செய்திருந்தது யாராக இருப்பினும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.