/indian-express-tamil/media/media_files/2025/10/10/rakshana-2025-10-10-13-05-58.jpg)
அறிமுக இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மருதம்’. இந்த படத்தில் ரக்ஷனா, அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவசாயின் வாழ்வியல் மற்றும் விவசாயத்தை அழுத்தமாக பேசும் படமாக உருவாகியுள்ள ‘மருதம்’ திரைப்படத்தை வெங்கடேசன் தயாரித்துள்ளார்.
இப்படம் இன்று (அக்.10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நேற்று (அக்.09) ‘மருதம்’ திரைப்படம் பத்திரிக்கை திரையிடப்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விதார்த், “நானும் உங்களுடன் சேர்ந்து தான் படத்தை பார்த்தேன் படம் மிகவும் நன்றாக வந்து இருக்கிறது. படத்தின் நாயகியான ரக்ஷனா சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் சிறுவனாக நடித்த பையன், எங்களை விட, மிகவும் பிரமாதமாக நடித்து இருக்கிறார். இசையமைப்பாளரின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது. அனைவருக்கும் நான் நன்றியை சொல்லிக்கொள்கிறேன். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களுடைய கையில் தான் இருக்கிறது” என்றார்.
இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், படத்தின் நாயகியான ரக்ஷனாவிடம் முதல் படத்திலேயே தாயாக நடித்து விட்டால், அடுத்த படத்தில் தாயாக நடிப்பதற்கு தானே வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகை ரக்ஷனா, “நான் இரண்டாவது படத்தில் நடித்து விட்டேன். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த படம் வெளியாகும் போது உங்களுக்கு தெரியு. அந்த படத்தின் இயக்குனர் என்னை இப்படி கேட்கவில்லை என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன் உங்களுடைய நன்மைக்கு தான் சொல்கிறேன் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் பட வாய்ப்புகள் இல்லை என்று கதாநாயகிகள் கூறுகிறார்கள் என்று சொன்னார். அதற்கு நடிகை ரக்ஷனா, ” ஐஸ்வர்யா ராஜேஷ் ’காக்கா முட்டை’ திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது உங்களுக்கு தெரியுமா?
அதேபோல், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து விட்டால், அதன் பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்கிற ரூல் இங்கே இருக்கிறது. அப்படி ஒரு ரூலை இங்கே இருப்பவர்கள் வகுத்து இருக்கிறார்கள். அந்த ரூலை யாராவது உடைக்க வேண்டும் அல்லவா. அது நானாகவே இருக்கிறேன்” என்று பதிலடி கொடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.