ஜி.எஸ்.டி. பிரச்னையால் ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம், தீபாவளி ரிலீஸாக கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து எடுக்கப்பட்ட இந்தப் படம், இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கும் என்கிறார்கள்.
‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், ‘இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்’ என்று பாஜக தலைவர்கள் குரல் கொடுத்தனர். அதை எதிர்த்து பிற கட்சியினரும், சினிமாத்துறையை சார்ந்தவர்களும் குரல் கொடுத்தனர்.
‘இந்தக் காட்சிகளால் யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டால், அதை நீக்கத் தயார்’ என தேனாண்டாள் நிறுவனத்தின் உரிமையாளரான முரளி ராமசாமி அறிக்கை வெளியிட்டார். ஆனால், ‘மெர்சல்’ படத்தில் இருந்து எந்தக் காட்சியும் நீக்கப்படாது என தேனாண்டாள் நிறுவனத்தின் சிஇஓவான ஹேமா ருக்மணி ட்விட்டரில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கடந்த புதன்கிழமை வெளியான ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ மட்டும் வெளியாகவில்லை. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை மியூட் செய்தால் மட்டுமே சான்று தருவோம் என சென்சார் போர்டு அதிகாரிகள் கூற, அப்படியே மியூட் செய்து கொடுத்தனர். பின்னர், யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
எனவே, இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடாமல் ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளனர். சென்சார் ஆகத் தாமதமானதால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.