சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா, அடுத்து சிம்புவை வைத்து இயக்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தை, மோகன் ராஜா இயக்கியுள்ளார். மலையாள முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடிக்க, ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, சார்லி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். முக்கியமான சமூகப் பிரச்னையை இந்தப் படம் பேசியுள்ளது. ஆனால், காமெடிக்குப் பெயர்போன சிவகார்த்திகேயன், கருத்து மழை மட்டும் பொழிந்தது பலருக்குப் பிடிக்கவில்லை. அத்துடன், நயன்தாராவுக்கும் பெரிதாக வேலையில்லை.
இந்நிலையில், மோகன் ராஜா இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ‘அரண்மனை’ படத்தைத் தயாரித்த விஷன் ஐ மீடியா தினேஷ் கார்த்திக், மோகன் ராஜா இயக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்க இருக்கிறார். ஹீரோவாக சிம்பு நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
என்னது சிம்புவா? என்று உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு ரெட் கார்டு போடப்பட்டாலும், மணிரத்னம் இயக்க இருக்கும் மல்ட்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இதற்கான ரிகர்சலையும் சமீபத்தில் முடித்தார். எனவே, இனிமேல் சிம்பு நேரத்துக்கு ஷூட்டிங் வருவார் என்றும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஒத்துழைத்து நடந்து கொள்வார் என்றும் நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையை சிம்பு காப்பாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.