/indian-express-tamil/media/media_files/2025/09/24/ilaiya-2025-09-24-17-41-46.jpg)
ஒரு பாட்டுக்கு 24 டியூன்... உட்கார்ந்த இடத்திலே போட்ட இளையராஜா: பிரபல இயக்குநர் ஓபன்!
தமிழ் சினிமாவில், காமெடி நடிகராக அறியப்பட்ட வர் ரமேஷ் கண்ணா. இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘படையப்பா’ திரைப்படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்திருப்பார். மேலும், பல பிரபலங்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி உள்ளார்.
ரமேஷ் கண்ணா நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு இயக்குநரும் கூட. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பல படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒரு சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
இவர் கதை எழுதிய படம் தான் ஆதவன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், சூர்யா நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். மேலும், மலையாள நடிகர் முரளி, ஆனந்த் பாபு, ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா, இசையமைப்பாளர் இளையராஜா தனது படத்திற்கு டியூன் போட்டது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ நடிகர் அஜித்தை வைத்து ’தொடரும்’ என்று ஒரு படம் எடுத்தேன். அப்படத்தின் மியூசிக் கம்போஸிங்கிற்காக நான் சென்றேன்.
இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்தார். அப்போது என் படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் 24 டியூன் இளையராஜா போட்டார். உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள் என்றார்.
அந்த 24 டியூனும் ஒரே நேரத்தில் போட்டதுதான். நாங்கள் உதவி இயக்குநராக இருக்கும் பொழுது ஏழு, எட்டு பேருக்கு ஒரு வண்டி தருவார்கள்.
அப்போது படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுது பாடல் கேசட் போடுவோம் போகும் வழியில் கேட்டுக் கொண்டு போகலாம் என்று. அப்போது ஒரே பாட்டை திரும்ப திரும்ப ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்வோம்.படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வரை ஒரே பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.
அப்படி நாங்கள் கேட்டு ரசித்த பாட்டு தான் ‘நான் தேடும் செவ்வந்தி பூ இது’. உதவி இயக்குநராக இருந்த போது கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ மற்றும் ரஜினியின் ‘முத்து’ படத்தில் பணியாற்றினேன். தேவா சார் கமல் சார் எல்லாம் உட்கார்ந்து கம்போஸ் செய்த பாடல் தான் ‘காதலா காதலா’ பாடல்.
ரஜினியின் ‘முத்து’ படத்தில் பாடல் வாங்க செல்லும் பொழுது ஏ.ஆர்.ரகுமான் சார் பாடலுக்கான வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். பின்னர் நமாஸ் செய்ய அறைக்கு சென்றுவிட்டார். நான் அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் படுத்து தூங்கிவிட்டேன். திடீரென எழுந்து பார்த்தால் ரஹ்மான் சார் கீழே தரையில் படுத்திருந்தார். அப்படி எளிமையான மனிதர்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.