/indian-express-tamil/media/media_files/2025/09/23/1-2025-09-23-16-15-46.jpg)
எனக்கு கிடைத்த ப்ளஸ் பாயிண்ட், என் பாட்டு ஹிட்டாக நான் செய்தது இதுதான்: ரகசியம் உடைத்த எம்.எஸ்.வி த்ரோபேக்!
எம்.எஸ்.வி.யின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளலும், துடிப்பும் நிச்சயம் கலந்திருக்கும். நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற எங்கேயும், எப்போதும் பாடல் நிச்சயம் கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும்.
மனதை மயக்கும் இனிமையான பாடல்களைத் தந்ததாலேயே அவருக்கு மெல்லிசை மன்னன் என்ற பட்டம் கிடைத்தது. கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.வி.
சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், அஜீத் என மூன்று தலைமுறைகளைத் தாண்டி பணிபுரிந்தவர் எம்.எஸ்.வி.
ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் என பாராபட்சமின்றி தனது இசையை அள்ளி வழங்கிய வள்ளல் அவர். இசையமைப்பதோடு நிறுத்தி விடாமல், சில பாடல்களை தந்து வித்தியாசமான குரலால் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.வி.
'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான், தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்' என பாடல் வரிகளை உண்மையாக்கியவர். காலத்தால் அழியாத பலப் படங்களைக் கொடுத்த எம்.எஸ்.வி. தனது இசையில் மட்டுமின்றி, இளையராஜா, தேவா, கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரது இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி, குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை நிரூபித்தவர் எம்.எஸ்.வி. தமிழில் சுமார் 10 படங்களில் அவர் நடித்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்ளிட்ட படங்கள் அவற்றில் சில.
இந்நிலையில், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி தனது பாடல்கள் ஹிட்டாகுவதற்கு என்ன காரணம் என கூறும் த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “எனக்கு கிடைத்த வாய்ஸ்களெல்லாம் ரொம்ப பிளஸ் பாயிண்ட். டி.எம்.எ, சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.எஸ், ஜேசுதாஸ், பாலு போன்றவர்கள் கிடைத்தார்கள்.
அதேபோன்று ஒரு புது வாய்ஸை அறிமுகப்படுத்தினேன். அதுதான் கோவை செளந்தரராஜன். பெண்களில் சுசீலா, ஜானகி அம்மா, எல்.ஆர்.ஈஸ்வரி. பி.லீலா இப்படி நல்ல வாய்ஸ்கள் கிடைத்தது. இந்த வாய்ஸ்களில் என்னென்ன பாட்டு யார் யாருக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கண்டுபிடிப்பதே ஒரு பெரிய கலை.
இந்த பாட்டு அமைக்கும் போது அவர்கள் பாட வேண்டும் இவர்கள் பாட வேண்டும் என்று அமைக்க கூடாது. பாடல்களை அமைத்துவிட்டு அதற்கு யார் நன்றாக இருப்பார்கள் என்று யோசித்து பாட வைக்க வேண்டும். ’காசேதான் கடவுளடா’ படத்தில் இடம்பெற்றிருந்த மெல்ல பேசுங்கள் பாடல் கொஞ்சம் ஹஸ்கியாக பாட வேண்டும் என்பதால் எல்.ஆர். ஈஸ்வரியும் கோவை செளந்தர்ராஜனுன் பாடினார்கள்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.