‘திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல’ என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாஜக பிரமுகரான அஸ்வினி உபாத்யாயா, நாட்டுப்பற்றை வளர்க்கும் விதத்தில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்தனர். முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு எழுந்து நிற்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது. அதேசமயம், விருப்பப்பட்டால் தேசிய கீதம் இசைக்கலாம் எனவும், அவ்வாறு இசைக்கும்போது அதற்குரிய மரியாதையைத் தரவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.